Thursday, May 01, 2014

#HappyBirthdayThala. (இத லைக் பண்ணி உங்க தன் மானத்தை இழக்காதீங்க)


தொழிலாளர்_தினத்தில் தலைக்கும், தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள் மாறி மாறி பறக்கிறது. எதுக்கு வம்பு #HappyBirthdayThala. சரி இப்போ விசயத்துக்கு வாறன்.. இந்த தினத்தில் உங்களுக்கெல்லாம் என்ன தோன்றுகின்றது என்பது தெரியாது. எனக்கு தொழிலாளர் என்ற சொல்லைக் கேட்டாலே என் மைன்ட் அதுவாகவே குழந்தை என்ற சொல்லையும் அதற்க்கு முன்னால் இணைத்துக் கொள்கிறது.

#குழந்தைத்_தொழிலாளிகள், நம்ம யாருக்கும் இந்த நாட்களில் கண்ணில் படாத ஒரு கூட்டம் இது.

பணத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு பாசத்தைத் தூக்கி வீதிகளில் எறிந்து விட்டோம். கடற் கரையில் மிட்டாய் விற்பதில் இருந்து ஏசிக் காட்சி அறைகளில் தரை துடைப்பது வரைக்கும் இந்த நெட்வொர்க் ரொம்ப பெரியது. நம்மளும் அத கண்டு கண்ணீர் வடிக்காத நாட்களே இல்லை. என்ன செய்வது அவன் தலை எழுத்து?



நம்மளை நாம் எடை போட்டுக்க ஒரு சின்ன உதாரணம். "நம்ம பக்கத்து வீட்டுல ஒரு பையன் 12/14 வயசுல வேலைக்கு போறான் எண்டு வச்சிக்குவோம்.. நம்ம வீட்லயும் அதே வயசில நமக்கு ஒரு மகன்..."

நம்ம அந்த பையன எதுக்கு தெரியுமா யூஸ் பண்ணுவோம்...

ஒரே ஒரு டயலாக்
உனக்கு என்னடா குறை? அந்த பையனப் பாரு? இந்த சின்ன வயசுலேயே எவ்வளவு பொறுப்பா இருக்கான்?

இதுக்குதான் யூஸ் பண்ணுவோம். நம் குழந்தையின் குறையை சுட்டிக் காட்ட அவனை யூஸ் பண்ணிட்டு தூரப் போட்டுவோம். நம்மில் எத்தனை பேர் அந்தப் பையனின் கல்வியை நினைத்துப் பார்ப்பதுண்டு? அது சரி நம்ம மனிதன் என்பதில் இருந்து இயந்திரமாய் மாறி பல தசாப்தம் ஆகிட்டு????????

அவர்களுக்கு கஷ்டம் இருப்பதால் தான் வீதியில் இறங்கி வேலை செய்கிறார்கள். நல்ல திறமைகள் வெறும் பணத்தால் செயலிழந்து போகின்றது என்பதுதான் உண்மை.

இந்த இடத்தில் என் நாட்டில் வறுமையும்,சமூகமும் சேர்ந்து பலி கொடுத்த #ரிசானா_நபீக் என்ற சிறுமியையும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நினைத்துப் பார்கிறேன்.

உழைப்பு என்பதும் ஒரு உரிமை... ஆனால் ஒரு குழந்தையின் உரிமை உழைப்பு அல்ல, நல்ல கல்வி. நான் தீர்வு சொல்வதற்கு அனுபமற்றவன்.. அனுபவிப்பதை பகிர்பவன். தீர்வு உங்கள் கையில்.

உழைப்பாளிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். உங்கள் வியர்வையே இந்த பூமிக்கு அழகு.



Post Comment

Monday, October 28, 2013

அவள்!


அவள்,
அழகிய வினா?
என் இரகசியக் கனா!

அவள்,
ஆறாத காயம்,
என் வாழ்வின் பாலம்.

அவள்,
இதயத்தின் ஒலி,
என் வறட்சியின் வலி.

அவள்,
ஈரமான தென்றல்,
என் பாதையின் முட்கள்.

அவள்,
உணர்வுள்ள இசை,
என்னை இயக்கும் விசை.

அவள்,
ஊக்க நதி,
என்னை துரத்தும் விதி.

அவள்,
எளிமையின் உருவம்,
என் சுவாசத்தின் துயரம்.

அவள்,
ஏகாந்தப் பாதை,
பனியுடன் பிறந்த காலை.

அவள்,
ஐயத்தின் உடல்,
என் துணிச்சலின் நிழல்.

அவள்,
ஒடுங்கிய இரவு,
என் தனிமையில் உறவு.

அவள்,
ஓவிய வர்ணம்,
என் தேடலின் கிண்ணம்.

Post Comment

Saturday, July 06, 2013

அழகிய தருணங்கள்

அம்மாவின் மடியோடு
உறங்கிய இரவுகள்,
அப்பா அரவணைத்து
தட்டிக் கொடுத்த நேரங்கள்..

இருட்டு வானில்
ஜன்னல் நட்சத்திரம்
எண்ணி மகிழ்ந்த
இரவுகள்..

எதற்கும் துணியும்
இயல்பான வீரனாய்
சுற்றித் திரிந்த
பள்ளிப் பருவங்கள்..

நட்புக்குள் வாழ்வை
சுருக்கி நகைப்புடன்
நடந்த தருணங்கள்..

கரையை சேர போராடும்
அலையில் காதலோடு
கால் நனைத்த நாட்கள்..

மனதை திருடிய
மங்கையை மண மேடையில்
கைப் பிடித்த நிமிடங்கள்..

முதல் மோகத் தீயில்
வெட்கப் போர்வை எரிய
வியர்வையோடு கழிந்த
பொழுதுகள்..

என் உயிர் சுமந்து
புதிதாய் பூத்த பிஞ்சை
அள்ளிக் கொஞ்சி
விளையாடிய வினாடிகள்..

வறட்சியிலும் பசுமையிலும்
நம்பிக்கையோடு வாழ்ந்த நாட்கள்..
சுழலும் வாழ்வினில்
சுகமான அழகிய தருணங்கள்.

ஓடி ஒடுங்கிய -ஒரு
உடலோடு உறவாடும் ஆத்மாவின்
நினைவலைகளின் வாசிப்பு
இவ் வரிகளாய்..

Post Comment

Monday, April 15, 2013

"போய் வாறன்"



இது ஒரு ஊஞ்சல் பயணத்தின் ஒப்பிடம்,
உணர்வைக் கிறுக்கும்
ஒரு கைக் குழந்தையின் ஓவியம்.

பிரிவை விடப் பயங்கரம் பூமியில் இல்லை,
அதை ருசிப்பவன் மறுமுறை மரணிப்பதில்லை.

நினைவோடு வாழ்ந்தால்
எங்கிருந்தும் வாழலாம் என்ற
என் கருத்துக்கள் எல்லாம்
கண்முன்னே கருகிப் போகிறது..

கண்களிடம் இருந்து, கனவுகளை;
காலம் கழட்டி எறிந்த வலி
இன்னும் தீரவில்லை.

வலியினால்
விழி நீர் விழுவதை
தடுக்க முடியவில்லை.

"விமான நிலையம்"
என் போன்றோருக்கு
கண்ணீரைக் காதலிக்கும்
ஒரு கல்லறைக் கட்டடம்.

பிரிவுகளுக்கு
பின்னணி இசை வடித்துக் கொண்டிருக்கிறது
ஏறி இறங்கும் விமானங்கள்.

போலிப் புன்னகையின் பெறுமதியை
புரியவைக்கிறது காலம்.
நடிப்பு என்ற மனித குணம்
நல்லது என்பதை கற்றுக் கொடுக்கிறது வாழ்க்கை.

சுமக்க முடியாத உறவுகளின் பிரிவை,
சுமந்து கொண்டு பறப்பது காலக் கட்டாயமாகிப் போனது..

சூரியன் மேல் வாழும்
பனித்துளியாய் கரைகிறது வினாடிகள்..

கட்டி அனைத்து விடை கொடுக்கிறது
அத்துணை உறவுகளும்
அவள் ஆன்மாவைத் தவிர..

தாய் மண்ணோடும்
தன் உறவுகளோடும்
ஏதோ பேச நினைக்கிறேன்
மொழிகள் மறந்து மௌனித்து விடுகிறேன்.

மறுபடி முயல்கிறேன்
மீண்டும் தோற்கிறேன்.

வறண்ட உதடுகள் நனைத்து,
ஒரு முறை கனைத்து சொல்கிறேன்
போய் வாறன்

கைகளை அசைத்து விட்டு
திரும்பி நடக்கும் என் உறவுகளுடன்
என் நிஜம் நடப்பதைப் பார்கிறேன்.

வெறும் நிழலாய் நான் நடந்து
ஒரு முறை திரும்பிப் பார்கிறேன்,

மௌனத்துக்குள் அழும் என் குரல்
இவர்கள் செவி சேராது என்றெண்ணி
என் திசையில் நடக்கிறேன்..

நாளை நிச்சயமில்லா உலகில்
நடப்பதை இறைவன் நாட்டத்தில் விட்டு..

Post Comment

Monday, March 18, 2013

நான் கவிஞனாய்..



நான் கவிஞனாய்..

நிஜங்களை சொல்லி விட ஆசைதான்
நிதர்சனம் தொகுத்துவிட ஆசைதான்
மனிதனை நேசிக்க ஆசைதான் - அவன்
மனங்களை வாசிக்க ஆசைதான்.

நான் கவிஞனாய்..

கல்லறைக்குள் வாழ்ந்திட ஆசைதான்
கனாவினுள் கண்மூடிட ஆசைதான்
மௌனத்தின் மொழி எழுத ஆசைதான்- முதல்
மோகத்தில் ஊமையாக ஆசைதான்.

நான் கவிஞனாய்..

ஊனங்களை உசுப்பிவிட ஆசைதான்
ஊழல்களை ஒழித்துவிட ஆசைதான்
காதலுக்கு கண் செதுக்க ஆசைதான் - இந்த
காலத்துக்கும் கற்றுக் கொடுக்க ஆசைதான்.

நான் கவிஞனாய்..

எண்ணங்களை எடுத்தியம்ப ஆசைதான்
எளிமையில் ஏழை போல் என் கவியிருக்க ஆசைதான்
குழந்தைக் கோபம் கொள்ள ஆசைதான் -சிறு
குடத்தினுள் குள நீச்சல் போட ஆசைதான்.

நான் கவிஞனாய்..

தாய் போல் அரவணைக்க ஆசைதான்
தாய்மை சுகம் அனுபவிக்க ஆசைதான்
மொழிக்கும் கவிக்கும் உயிர் கொடுக்க ஆசைதான்
மொத்த பூமிக்கும் உதவிட ஆசைதான்.

நான் கவிஞனாய்..

மெழுகு போல் உருகிவிட ஆசைதான்
மக்கள் இருள் நீக்கிவிட ஆசைதான்
உரிமைக்காய் உயிர் துறக்க ஆசைதான் - பின்பு
என் கவியில் நான் சுவாசிக்க ஆசைதான்.

Post Comment

Saturday, March 02, 2013

நான் ஒரு உரிமைப் போராளி.



இருளின் ஒளிக்குள்
இரவின் உயிருக்குள்
ஒரு உரிமைக் குரலின்
ஒலிப் பிரளயம்

வாழ்வின் வலிக்குல்
அடக்கு முறைக்குள்
இந்த கவிதைப் பிரியனின்
கவி முழக்கம்

உவமைகள் துறந்து,
உரிமைகள் இழந்து
ஓரமாய் ஒடுங்கி ஒலிக்கிறது
என் கானம்..

தன்னை தொலைத்து
தன்மானம் களைந்து
தரம் கேட்டுக் கிடக்கிறது
இப் பூகோளம்..


என் வாழ்கைச் சுவர்களை
வலிக் கற்கள் கொண்டு
வடிமைத்திருக்கிறது காலம்..

மூச்சு முட்டும் இருளிலும்
அதை விட மிஞ்சியதாய்
பிழிந்தெடுக்கிறது ஒரு சோகம்..

நம்பிக்கை இறுக்கிப் பிடித்து
முயற்சியை மூச்சாக்கி
ஓராயிரம் சுவரையும்
தகர்த்து விடுவேன்.

அதே வலிக் கற்கள் உரசி
அக்கினி செதுக்கி
உண்மைகள் உரத்து உரைத்திடுவேன்.

சமூகப் பார்வையில்
நான் சிறுபான்மை,
தாழ்த்தப் பட்டவன்,
உரிமை இழந்தவன்.

காலச் சொற்கள்
கசப்பாயினும்
எண்ணத்தின் பரிணாமத்தில்
நான் ஒரு உரிமைப் போராளி.

என் காகிதக் கிருக்களை
காற்றுச் சுமக்கும் வரை
எனக்கு மரணமில்லை.

உண்மைகள் என்னுடன் இருக்கும் வரை
என் நிழலுக்கும் பயமில்லை.

மீண்டுமொரு முறை அழுத்திச்
சொல்லி விடுங்கள்
"உரிமை இழந்து உயிர் வாழ்வதை விட
உயிரைத் துறந்து உரிமை சுவாசிப்பதே மேல்.."


வாழவேண்டும் என்பது
என் ஆசைதான்
உரிமைகள் இழந்து அல்ல...




Post Comment

Monday, January 28, 2013

விஸ்வரூபம்+முஸ்லிம்=???? (சுவைக்க ஒரு சூடான பகுதி)


இது முஸ்லிம்களுக்கான பதிவு. நீண்டதொரு வாதம், கலந்துரையாடல், கருத்து மோதலின் பின் தான் நான் இதை எழுதுகிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்னும் மன நிலையில் நான் இதை எழுதவில்லை என்பதையும் முதலில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் பெரிய மேதை எல்லாம் இல்லை. சாதாரண மனிதன். இது என் சிறிய மூளையில் உதித்த ஒரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சி.

விடயத்துக்கு வருவோம். இன்று எல்லோராலும் பேசப்படுகின்ற ஒரு விடயம் விஸ்வரூபம் திரைப்படமும் அதன் பின்னணியில் முஸ்லிம்களின் செயற்பாடுகளும். முதலில் முஸ்லிம்கள் பற்றி பேசுவோம் பிறகு கமல் பற்றிப் பேசலாம்.
சினிமாவுக்கு முஸ்லிம்கள் இவ்வளவு முக்கியத்துவம் ஏன் கொடுக்கிறார்கள் என்பது எனக்கு இது வரை விளங்கவில்லை? இஸ்லாம் தடை செய்த ஒன்றுக்காய் ஏன் இவ்வளவு பெரிய முக்கியத்துவம்? இதற்க்கு அவர்கள் சொல்லும் காரணம் சினிமா இன்று மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற ஒரு ஊடகமாய் மாறி இருக்கிறது. அதனூடாக நச்சுக் கருத்துக்களை பரப்ப முடியும் என்பதே. உண்மைதான் ஆனால் இஸ்லாத்தில் சினிமா என்பது எனக்குத் தெரிந்த அளவில் ஹராமான (தடை செய்யப்பட்ட ) விடயமாகும். அது இஸ்லாத்தில் தடை செய்யப் பட்ட பின்னர் அதை பற்றி பெரிதாக நீங்கள் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் இறைவன் "அந்தப் பக்கம் நீ போகாதே அது உன்னை காயப் படுத்தும்" என்று தடுத்து விட்டான். ஆனால் நாம் அங்கு போய் இருந்து கொண்டு "நான் சினிமா பார்க்க வேண்டும் ஆனால் என்னை காயப் படுத்தக் கூடாது" என்று கோஷமிடுவது முஸ்லிம்களுக்குரிய பண்பாகாது. இஸ்லாம் தடை செய்த ஒன்றுக்குள் நீங்கள் செல்லவே இயலாத போது அதை சீற்படுத்தவா முயற்சிக்கிறீர்கள்?

விளங்கிக் கொள்வதற்காக ஒரு சிறிய உதாரணம் பன்றி இறைச்சி உண்பது ஹராம் (தடை). பன்றி தடை என்றால் அதற்குள் நாம் சென்று இல்லை பன்றி தக்பீர் சொல்லி அறுக்கப் பட வேண்டும் என்று விவாதிப்பது/போராடுவது எந்த வகையில் நியாயமாகும். உனக்குத் தடை என்றால் நீ அங்கு செல்லவே கூடாது என்பது தானே முறை. இதை ஏன் நீங்கள் உணரவில்லை?

சினிமா, ஆடல், பாடல், இசை இவை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை. அதற்குள் நாம் சென்று எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதே எனது கருத்து.நமக்கு சம்மந்தம் இல்லாத இடத்துக்குள் நாம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும். ஒரு 3 மணி நேர திரை விளையாடல் பார்த்து ஒரு மார்க்கத்தை ஒருவன் விளங்க முற்பட்டால் அவனுக்குப் பெயர் முட்டாள்.

ஒரு சினிமாவுக்காக நீங்கள் நடத்திய போராட்டத்தால் அள்ளாஹ்வின் நாமமும், அவன் தூதரின் நாமமும், புனித இஸ்லாத்தின் நாமமும், எத்தனை தடவைகள் எவ்வளவு எழுத்துக்களால் காயப் பட்டிருக்கிறது என்பதை அறியவில்லையா நீங்கள்? மார்க்கம் தடை செய்த ஒரு விடயத்துக்காய் நீங்கள் நேசிக்கின்ற மார்கத்துக்கு நீங்களே அவப் பெயரை ஏற்படுத்தி விட்டீர்கள் போல் தெரிகிறது. முஸ்லிம் சகோதர்களே இது ஒரு சிறந்த அணுகு முறையாய் இருக்காது என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

குர்ஆன் சொல்வதைப் பாருங்கள்.

(முஃமின்களே!) “அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.(4:140)

கமல் ஹாசன் இஸ்லாத்தை அவமதின்றாரா? முஸ்லிம்கள் மனதை வேதனைப் பட வைகிறாரா? அவருடன் நீங்கள் சேர்ந்து இருக்க வேண்டாம். நட்பு பாராட்ட வேண்டாம். அவர் அக்கருத்தில் இருந்து நீங்கி உங்களிடம் மன்னிப்புக் கேட்டு திருந்தும் வரை.. இதுதான் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்னுடைய பார்வையில்..

ஆகவே யார் இம்மார்கத்தை அள்ளாஹ்வை அவனுடைய தூதரை பரிகாசிக்கின்றனரோ அவர்களை அவன் பார்த்துக் கொள்ளுவான். நீங்கலாக எதையும் செய்ய முயன்று உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். இன உறவுகளுக்கிடையில் பிரச்சினைகளை தோற்றுவிக்காதீர்கள்.

எமது சகோதரர்கள் முக நூலிலும், ட்விட்டர் என்னும் சமூக இணையத்தளங்களிலும் பிடித்த சண்டைகள் பரிமாறப்பட்ட கருத்துக்கள் மனித மொழிகளில் இருந்தே அகற்றப் படவேண்டிய சொற்களாக இருந்தது.(இக் கட்டுரைக்கான அவசியத்தை உணர்ந்ததுக்கான காரணம் இதுதான்)


கலைஞர்களே
உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்க வேண்டும். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மற்றவன் கழுத்தை நசுக்கக் கூடாது. அது சிறந்த படைப்பாகவும் இருக்க முடியாது. கமல் உங்களுக்கும் எனக்கும் எந்த உறவுமில்லை மனிதன் என்பதை தவிர. நான் சினிமாவை நேசிப்பவனும் அல்ல. ஆனால் இப் பிரச்சினைக்கேள்ளாம் உங்களுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு. இனி வரும் காலங்களிலாவது உங்கள் கலைப் படைப்பு யாரையும் துன்புருத்தாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் இஸ்லாத்தை முழுமையாப் படியுங்கள்.

மாற்று மத சகோதரர்களே
முஸ்லிம்களை பார்த்து இஸ்லாத்தை விளங்க முயற்சிக்காதீர்கள். அது சரியான நடைமுறையும் அல்ல. இஸ்லாத்தை விளங்க குர்ஆன், நபி மொழிகளைப் படியுங்கள். யாரிடமோ உள்ள குறைக்காக அவன் பின்பற்றும் மார்க்க சட்டங்களை, நல்ல மனிதர்களை, அவன் நம்புகின்ற இறைவனை உங்கள் சண்டையில் பலி கொடுக்காதீர்கள்.

இறுதியாக, என்னிடம் கூடுதலானவர்கள் கேட்ட விடயம் நீ விஸ்வரூபத்தை ஆதரிக்கிறாயா? எதிர்கிறாயா? உங்கள் எல்லோருக்கும் என் பதில் "நான் குழப்பங்களை தூண்டும் சினிமாவின் எதிரி".

பின் குறிப்பு : இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்கள் ஏதும் நான் சொல்லி இருந்தால் உடனடியாக சுட்டிக் காட்டவும்.

Post Comment

Friday, January 25, 2013

"கைகொடுப்போம் வாருங்கள்."


கனவும், கற்பனையும்
கொட்டிக் கிடக்கிறது
நிஜங்கள் இன்று
எதிலுமே இல்லை.

மெய்யும், பொய்யும்
கலந்தே உலகை ஆழ்கிறது.
உண்மையை உணர்த்த
கைகொடுப்போம் வாருங்கள்.

பிரிவினை பூமியில் படர்ந்து விட்டது
மொழியால், ஜாதியால், நிறத்தால்..
பூமிக்கு புரிய வைத்து ஒற்றுமையை
ஊக்குவிக்க கை கொடுப்போம் வாருங்கள்.

"அமைதியாய் வாழ்பவனை
அடக்க நினைக்கிறான்"
அகராதியை விட்டே அடிமையை துரத்த
கை கொடுப்போம் வாருங்கள்.

வாழ்க்கைக்கு வழி காட்டிய
பெற்றோர்கள் இன்று
அன்றாட உணவுக்காய்
வீதிகளில்..

அவர்களின் பசி போக்கி
அன்பால் அரவணைக்க
கை கொடுப்போம் வாருங்கள்.

யுத்த அரக்கனால் உறவிழந்து
பாசத்துக்காய் பரிதவிக்கும்
குழந்தைகள் ஆயிரம்..

அவர்களின்
கண்ணீர் துடைத்து
பாசத்தை பரிசளிக்க
கை கொடுப்போம் வாருங்கள்.

நல்லதைத் தூண்ட..
தீயதைத் துண்டாக்க..
கை கொடுப்போம் வாருங்கள்.

மனிதத்தை வளர்க்க..
மனிதனாய் வாழ..
கை கொடுப்போம் வாருங்கள்.

Post Comment

Thursday, January 17, 2013

உன்னைப் பிரிய மாட்டேன்.


கண்ணுக்குள் உன்னை வைத்து
இமைகளை மூடுகிறேன்,
என் இரவின் கனாக்களிலும்
நீ வர வேண்டும் என்று..

இதயத்துக்குள்
நினைவுகளாய் நிரம்பிவிட்ட
உன் ஞாபகங்கள்,
அத்துணை அணுக்களிலும்
இரத்த ஓட்டமாய் கலந்து..

என் ஒவ்வொரு அசைவிலும்
உன்னையே பிரதிபலிக்கிறது.

அழகிய நினைவுகளும் நீ.
அழகிய நிகழ்வுகளும் நீ.
அழகிய என் நிதர்சனமும் நீ.

என் காதோடு உன் குரல்
கைபேசி வழியே ஊடுருவ..
உலகையே மறந்து போகிறேன்,
உனக்குள் என்னை புதைத்தவனாய்.


வழிகளில் விழி வருடி
நீ செல்கின்ற நேரம்..
உன் மௌனத்துக்குள்
உறைந்து விடுகிறேன்,
விழிகளை மட்டும் அசைத்தவனாய்.

எந் நேரமும் உந்தன் நினைப்பு,
உன்னை பார்க்க மனம் துடிக்கும் துடிப்பு,
நீ அருகில் இல்லாது நான் தவிக்கும் தவிப்பு,

நினைப்பு, துடிப்பு, தவிப்பு,
இவை மூன்றையும் கலந்து
காலம் செய்யும் நகைப்பு,
இந்தக் காதல்.

போராட்டக் கடலில்,
மூச்சுப் பிடித்து சுழியோடி
நான் கண்டெடுத்த காதல் சிற்பிக்குள்,
உயிர் வாழ்ந்த முத்து நீ.

மூச்சே நின்றாலும்..
உன்னைப் பிரியப் போவதில்லை.

Post Comment

Sunday, January 13, 2013

பெத்த மனம் பித்து பிள்ள மனம் கல்லு.


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை' என்றார்கள். (Bukahari Volume:6 Book:78)

இது எனக்கு மிகவும் பிடித்த அறிவுரைகளில் ஒன்று. இதை நான் இங்கு சுட்டிக் காட்டுவதற்கும் நான் பகிரப் போகும் விடயத்துக்கும் நிறையவே ஒற்றுமை உண்டு. விடயத்துக்கு வருகிறேன்.

அன்று சண்டே.. ஆஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இரண்டாவது கிரிக்கெட் போட்டி.. நானும் மிக ஆவலாக இந்தப் போட்டியிலாவது இலங்கை வெல்லுமா என பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது யாரோ என் வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கேட்டு போய் திறந்து பார்த்தேன். வயதான பெண்மணி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

விசயத்தைப் புரிந்து கொண்டு 10 ரூபா எடுத்துக் கொடுத்து கதவடைக்க முயன்றேன் அப்போது அவர் என்னைப் பார்த்து "குடிக்க தண்ணி இருக்குமா?" என்றார். "உள்ளே வாங்க" என சொல்லிவிட்டு அம்மாவை கூப்பிட்டு இவருக்கு தண்ணி குடுக்கும் படி கூறிவிட்டு நான் ஓடிச் சென்று டிவிக்கு முன்னாள் உட்கார்ந்து கொண்டேன்.

சிறிது நேரம் கழித்து யாரோ அழுவது போன்ற சத்தம் கேட்டது என்ன நடக்கிறது என்று பார்க்க வெளியில் சென்றேன் அந்த வயாதான பெண்மணியின் கண்கள் கண்ணீரைச் சொந்தமாக்கியிருந்தது. சமையலை முடித்து விட்ட என் அம்மாவும் அவருக்கு சாப்பிடுவதற்கு உணவையும் கொடுத்திருந்தார். நான் அப்படியே உள்ளே சென்று டிவியின் சத்தத்தை குறைத்து விட்டு என் அம்மாவும் அந்தப் பாட்டியும் உறவாடுவதைக் கேட்கலானேன்.


அவர் ஒரு ஏழை என்றும் அவருக்கு ஆண் மகன் ஒருவன் இருப்பதாகவும் ஆனால் அவனோ யாரோ ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு அவன் உழைப்பதை எல்லாம் அந்தப் பெண்ணுக்கு மட்டும் கொடுப்பதாகவும் தன்னை கவனிப்பதில்லை என்றும் அதனால் தான் தனக்கு இப்படி அடுத்தவரிடம் கை ஏந்த வேண்டிய நிலை என்றும் அவனை வலப்பதற்கு தான் மிகுந்த கஷ்டம் பட்டதாகவும் சொல்லிக் கொண்டு அழுதார்.

இந்த கதையை கேட்டுக் கொண்டிருந்த எனக்கும் மனதுக்குள் வலித்துக் கொண்டிருந்தது. என் அம்மா வாய் விட்டு அவனை ஏசிய போது என் மனதும் அம்மாவுடன் கை கோர்த்திருந்தது.

இது போன்ற பல சம்பவங்கள் நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். இது எவ்வளவு பெரிய அநியாயம் என்பதும் எமக்குத் தெரியும். இன்றைய வாலிபர்களில் பெரும் பகுதியினர் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் நாம் எத்தனை பேர் நம்மை இது வரை வளர்த்து ஆளாக்கிய நம் பெற்றோருக்கு சரியான முறையில் நடந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான்.

ஏனெனில் இக் காலத்தில் பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளே அதிகம். அதிகரித்திருக்கின்ற முதியோர் இல்லங்களும் அவை இன்னும் அதிகரிக்கப் பட வேண்டும் என்கிற தேவைப் பாடுகளையே நாம் இதற்கான ஆதாரமாக கொள்ளலாம்.

"தாய்" உலகில் சொல்லால் மதிக்கப் பட்டாலும் நிஜத்தில் நசுக்கப் படுகிறாள் என்பதுதான் மனம் வலிக்கின்ற உண்மை. ஒரு தடவைக்கு இருதரம் அவள் ஒரே விடயத்தைக் கேட்டால் அலுத்துக் கொள்கிறோம். நம் சிறு வயது ஒரு தடவை எண்ணிவிட்டால் அவளை முதுகில் ஆயுளுக்கும் சுமக்கலாம். ஒரு பிரசவ நேரத்து வலி போதும் அவள் எது சொன்னாலும் நாம் தலையாட்டி விடலாம்.

பொக்கிஷங்கள் இன்று வீதிகளில் அலைந்து திரிகிறது. அவசர மனிதனுக்கு அவைகளை திரும்பிப் பார்க்க நேரம் இல்லாமல் ஆசையும் பணமும் கட்டிப் போட்டிருக்கிறது.

மதங்களில், வேதங்களில், பாடல்களில், சினிமாக்களில் என்று எத்தனையோ தாய் பற்றிய விடயங்களைப் படித்தாலும், கேட்டாலும், அனுபவித்தாலும் ஏதோ ஒரு சமயத்தில் மனிதன் நன்றி கெட்டவன் என்பதைக் காட்டி விடுகிறான்.

என் கையில் இருந்த 1000 ரூபாவை அந்தப் பாட்டியின் கையில் வைத்து விட்டு "எந்த ஊர்?" என்றேன் என் ஊர் பெயர் தான் அவள் குரலில் ஒலித்தது. ஒரு இஸ்லாமிய முன் மாதிரிக் கிராமத்திலேயே (அப்படி சொல்லிக் கொள்வதில் இனி ஒரு பெருமையும் இல்லை என்பதை என் மனது சொன்னது) அந்த இஸ்லாத்தை போதித்த இறைதூதரின் போதனைகள் மறைந்து போனது என் ஊர் அடுத்த தலைமுறைக்கு எந்த வடிவில் கிடைக்கப் போகிறது என்பதை காட்டிச் சென்றது.

இலங்கை அணி மிகச் சிறப்பாக ஆடி இந்த போட்டியை வென்ற போதும் என் மனது ஏனோ சந்தோசப் படவில்லை. போகும் போது அந்த பாட்டி சொன்ன விடயங்கள் மட்டுமே என் நினைவுக்குள் இருந்தது. "என் மகன் பற்றி எனக்கு வருத்தம் தான் ஆனாலும் அவன் நல்லா இருக்கணும் தம்பி.. அவனை நான் மனது நோகல " இதை தான் சொல்வார்கள் போல் "பெத்த மனம் பித்து பிள்ள மனம் கல்லு என்று"

Post Comment

Saturday, January 05, 2013

"நல்லவனில்லை"



காதலே யார் நீ?
ஆணையும், பெண்ணையும்
இணைக்கும் பாலமா?
அல்லது அவர்களைப்
பிடித்த சாபமா?

வாழ்வில் ஒளியூடுகிறாய்
சில நேரம்..
வாழ்கையை எரிக்கிறாய்
பல நேரம்..

மாறி மாறி உருவெடுக்கிராயே..
பச்சோந்தி பெத்த பிள்ளையா நீ?

உன்னை வெறுத்தவர்கள்
மணமேடையில் உறவாட,
உன்னை அணைத்தவர்கள்
பின மேடையில் வாடுவதா??

உன் நியாயம்
புரியாப் புதிராகிறதே..

கனவுக்குள்
கற்கண்டாய் இருக்கிறாய்.
பல கவிதைக்கும்
கருவாய் இருக்கிறாய்.
செல்லாக் காசுகளையும்
தங்கமாக்கி ஜொலிக்கிறாய்.
தோழனாய் சில நேரம்
தோள் கொடுக்கிறாய்.




கல்லறைக்குள்
முதற் கல்லாய் இருக்கிறாய்.
கண்ணீருக்கும்
பிறப்பிடமாய் அமைகிறாய்.
எமனுக்கு
தூதாய் வருகிறாய்.
இதயத்தை கிழிக்கும்
முள்ளாய் வலிக்கிறாய்.

நன்மைக்கும், தீமைக்கும்
காரணமாய் இருக்கிறாய்.

உண்மையை சொல்
யார் நீ?

நிச்சயமாய் "நல்லவனில்லை."

Post Comment

Tuesday, December 25, 2012

கொலைகார நண்பன்..


என் கண்கள் பார்க்க
வெறுத்தது
இவன் முகமே..

ஒரு கொடூரச் சம்பவம்
சுமந்து பதை பதைக்கிறது
என் மனமே..

சிந்தனைச் செல்களுக்குள்
ஒரு சோகக் கீற்று
துளிர் விடுகிறது..

நானும்,அவனும்
நல்ல நண்பர்கள் தான்.
அந்த அனர்த்தத்துக்கு முன்னர்..

அப்பா.. அறிமுகப்படுத்தியவன்
இவனோடு விளையாட
விலைகள் இல்லை.

எனக்கு காதலைக் காட்டியவன்.
என் காதலியாய், அவளை
அவனுக்குத்தான்
முதலில் காட்டினேன்.

இன்று..
பல கோடி உயிர்களைப் பறித்தவன்
இவனைத் தண்டிக்க உலகச் சட்டத்துக்கு
தெரியவில்லை..

அன்றில் இருந்து
இவனோடு உறவாடுவதில்லை
நான்...

அதன் பின்பு
இன்று தான் என் முதல் தரிசனம்.
இதுவும் கடைசியாகத்தான் இருக்கும்.

அவன் நடத்திய
மனித வேட்டையின்
வினாடிகளே என் ஞாபக அணுக்களில்..

இதயம் வெடித்து இரத்தமாய்
கண்ணீரைக் கக்கியது கண்கள்.

திரும்பும் திசை எங்கும்
மனிதப் பிணங்களே..
என் விழிகளில் தெரிகின்றன.

நாலு திசையிலும்
உணர்விழந்த கதறல்களே..
காதுகளில் ஒலிக்கின்றன.

நினைவுகள் பின்நோக்கி நகர
நான் மெல்ல மெல்ல
அவனை முன்நோக்கி நடந்தேன்.


என் மடியில்
உயிர் துறந்த ஒரு சிறுமி,
நான் பிறக்கி எடுத்த பிணங்கள்,

பிரியும் உயிரை அருகில் இருந்து
அனுபவித்த நிமிடங்கள்,
உடையின்றி, சொத்தின்றி
நிர்வாணமாக்கப் பட்ட மனிதர்கள்,

பயத்துடன், பரிதவிப்புடன்,
பதட்டத்துடன் உறவுகளைத் தேடிய விழிகள்..

இவைகளே..
இவனைப் பார்க்கும் போது
என் கொடூர நினைவுக்குள்
இன்றும் ஒலிக்கும் சோக கீதங்கள்.

பேச மறுத்தது வாய்.
உள்ளம் பேசியது..

"ஏய் கொலைகாரக் கடலே!
நாங்கள் விட்ட கண்ணீர் சேர்த்து
ஒரு சமுத்திரம் செய்து
உன்னை அழித்தொளிக்கிறேன் பார்"
என்று சவால் விட்டது
என் சிறிய மூளை.

அமைதியாய் வந்து
என் பாதம் தொட்டு
மன்னிப்புக் கேட்டுச் சென்றது..
அந்த அலை..
கொலைகார நண்பனின் தூதாய்.

வந்த அலையிடம்
வாய் விட்டுச் சொன்னேன்.
"மறக்கவே முடியாத போது
மன்னிப்பு எங்கிருந்து சாத்தியம்??"

Post Comment

Thursday, December 06, 2012

"வறுமைக் காற்று"


சோகமாய் சொல்லும்
கவியிலும் சுவாரஸ்யம்
உண்டு.

ஏழையவன் வாழ்வைச்
சொல்லுகையில்
கண்ணீரே உண்டு.

வறுமையின் வலையில்
வசப்பட்டவனே
வாழ்வினில் வலி சுமப்பவன்.

தண்ணீரில் விழுந்த கற்கள் போல்,
வறுமைக் கண்ணீரில்
மூழ்கிப் போனவன் அவன்.

தீயுடன் உறவாடிய
கைக் குழந்தை போல்,
நிஜத்துடன் உறவாடும்
அவனும் என்றும்
காயம் கண்டவனே...

வறியவன் வாழ்வு பற்றி
இன்று அன்றாட அரசியல்..
நெஞ்சில் வருத்தமின்றி
மேடையில் அவன் உணர்வுகள்..

வியாபாரம் செய்கிறான்
அரசியல்வாதி
"ஐயோ..." அவனையே
தலைவன் என்கிறான்
அந்த அறியாவாதி.

பக்கத்து வீட்டுப் பவித்திராவோ?
பாலைவன ஆபிரிக்காவோ?
வறுமையில் பிறந்தவன்
வாழ்விழந்து தவிக்கிறான்.


உலகின் ஒரு மூலையில்
உணவில்லாமல் உயிர்விடுகிறது
ஒரு கூட்டம்.

மறு மூலையில் உணர்வில்லாமல்
உணவை வீணடிக்கிறது
ஒரு கூட்டம்.

ஆசையும், பணமும்
மனிதனை ஆளும் வரை
உதவும் கரங்களுக்கு
உயிரோட்டமில்லை.

வறுமைத் தொற்று நோய்
அழியவும் போவதில்லை.

கனவு உலகத்தில்
வறுமை ஒழிப்புக்கே
முதலிடம்.

வறியவன் வரியாய்
உரத்து ஒலிக்கிறது
இக் கவி என் கனவு உலகில்...

Post Comment

Friday, November 23, 2012

"அழாதே தாயே.."


"அழாதே தாயே.."
ஒரு உவமை தேடுகிறேன்
உன் கண்ணீர் வலி சொல்ல.
ஒன்று கூட கிடைக்கவில்லை
இந்த கவிப் பிரியனுக்கு.

கோடிக் கண்கள் அழுகிறது
உன் நிலை கண்டு.
குருதியும் உறைந்து கிடக்கிறது
உன் மண்ணின் துயர் கண்டு.

"உன் தேசம் அழிகிறது என்று அழுகிறாயோ?"
கண்ணீர் நிறுத்திக் கொள்.
கடைசி வரை நிலைக்கும் அது
உன் மனதில் எழுதிக் கொள்.

"வழியனுப்பி வைத்த மகன்
வரவில்லை என்று அழுகிறாயோ?"
துயர் துடைத்துக் கொள்,
பல இலட்சம் உயிர்கள்;
இன்று உன் மகனாய்,
நினைத்துக் கொள்.


உன் மகன் இரத்தம் படிந்த
பூமி இது.
உன் கண்ணின் ஈரம் கசிந்து
அதை கரைக்கக் கூடாது.

வரலாறு சொல்லப் போகும்
உன் வீர மகனின்
தியாகச் சான்று அது.

நீ அழுவதால் நானும் அழுகிறேன்.
உன்னுடன் இருக்க உயிர் துடிக்கிறேன்.
காரணம் நானும், உன் மகன் தான்...

"அழாதே தாயே.."
சுவன வாசலில் உன் மகன், என் சோதரன்
நமக்காய் காத்திருக்கிறான்.
"அழாதே..."

Post Comment

Monday, November 19, 2012

"என் கரமே உன்னைக் கொல்லும்"


மரணப் பீதி காற்றோடு
மனித தசைகள் அம் மண்ணோடு
என் கரமும் கவியின் வரியோடு
இரத்தம் வடிக்கிறது என் கண்ணோடு

நோபல் பரிசுகள் எங்கே?
மனித உரிமை குழுக்கள் எங்கே?
ஐநா எங்கே? அமெரிக்கா எங்கே?

உலகம் எங்கே? ஊடகம் எங்கே?
சுதந்திரம் எங்கே?
பாலஸ்தீன மக்களின் சுவாசம் எங்கே?

பூமிக்குள் புதைந்த மாதுவின்
கருகிய தேகத்துடன்
கருகிவிட்டது மனிதம்

அவள் கருவுக்கும்
கல்லறை நிலை கண்டு
கரைகிறது என் இதயம்

வெள்ளைச் சிரிப்பில்
என் உள்ளம் வென்ற ரோஜாக்கள்
கரிக் கருப்பாய் காட்சி கொடுப்பதேனோ ?

ஈனப் பிறவியான
இதயக் கனிவற்ற கயவனின்
வஞ்சகம் தானோ....


உன் பால் தேகத்தில்
குண்டு பாய்ச்சியவனுக்கு
உலகம் கேட்க உரத்துச் சொல்கிறேன்
"என் கரமே உன்னைக் கொல்லும்"

என் மௌன சப்தத்தில்
இடியாய் ஒலிக்கிறது
ஒரு சமூகத்தின் கடைசிக் கதறல்

ஓ சமூகமே!
உன்னை கதரவிட்டவனுக்கும்
கடைசியாய் சொல்கிறேன்
"என் கரமே உன்னைக் கொல்லும்"

வெறியாட்டம் ஆடும்
இஸ்ரேலியச் சொறிநாயே
மீண்டும் சொல்கிறேன்
"என் கரமே உன்னைக் கொல்லும்"

Post Comment

Friday, January 06, 2012

என்னைக் கொன்று விடு..


சுவாசமாய் நினைத்து
உன்னை சுவைத்து
சுடுபட்டுப் போன நாட்கள்
போதும் அன்பே..

காதல் தீயில்
கருகிப்போன இதயத்துக்கு
மருந்து போட்டே நகர்கிறது
என் மற்றைய வினாடிகள்..

தொடரும் நிழல் போன்று
உன் நினைவும்..
உளி செதுக்கிய சிற்பமாய்
உன் நாமமும்..
என்னோடு ஒட்டிக்கொண்டன.

பாலைவனத்தில் பட்டமரமாய்
உன்னை சுமந்து கொண்டு
பரிதவித்து நிற்கிறேன்..

கொடிய வறட்சியிலும்
நீ என்னுள் வற்றிப் போகவில்லை.
என் கொடிய நிமிடங்களிலும்
நான் உன்னை கழட்டி ஏறியவில்லை.

ஒருமுறை நிதர்சனமான
மரண வலியையும்,
ஒவ்வொரு வினாடியிலும்
தந்து சென்றவள் நீ..

பெண்ணே!
உன்னிடம் ஒரே விண்ணப்பம்?

என் கண்களின் ஈரம்
வற்றிப்போவதற்க்குள்
என்னைக் கொன்று விடு..

Post Comment

Thursday, January 05, 2012

கிழங்குக் கடை

"டேய் என்ன மச்சி சௌண்ட காணோம்?"

"இல்லடா எப்படி இருந்த நம்ம இப்படி ஆகிட்டோமே எண்டு யோசிச்சிட்டு இருந்தன் மச்சான்"

"சரி சரி விடு அதெல்லாம் ஒரு காலம் நீ ஆபீஸ் போக டைம் ஆகுது எண்டு சொன்னியே கிளம்பு அப்புறம் பேசலாம்"

"யா மச்சி மறந்தே போச்சு ஐல்கால் யு பக்டா பாய்"

"பாய் டா டேக்கேர்" எண்டு வச்சிட்டு என் மொனிடேர்ரையே பாத்துக்கிட்டு இருந்தேன். அவன் சொன்ன வார்த்தை மட்டும் என்னை ஏதோ செய்வது போன்று இருந்தது.

"எப்படி இருந்த நம்ம இப்படி ஆகிட்டோமே" என் இதய அறையில் எங்கோ ஒரு மூலையில் இந்த வார்த்தை முட்டிக்கொண்டு நின்றது. உண்மைதான் எப்படி இருந்தோம்.... இப்போ??? கண்களில் இருந்து ஒரு துளி வெளியே எட்டிப் பார்த்தது. மொனிடேர்ரையே மிச்ச நேரம் உற்றுப் பார்த்தால் எண்டு நினைக்கிறன். மூளையின் நினைவுச் செல்களுக்குள் அந்த காலங்கள் சுழலத் தொடங்கியது.
*********************************************

என் நண்பன் அவன். நாங்கள் பழகிய பசுமையான நாட்கள் அவை. என் பாடசாலை நாட்கள், மரணத்திலும் மறக்கமுடியா நினைவுகள். அவன் நினைவு எனக்கு வந்தாலே முதலில் ஞாபகம் வருவது அந்த கிழங்கு கடைதான். வாரத்தில் இரண்டு அல்லது 3 நாட்கள் அக் கடைக்குச் செல்வது எங்களுக்கு கட்டாயமாக்கப் பட்டு இருந்தது. இன்றைய பேஸ்புக், ட்விட்டர் போன்று எங்கள் ஏக்கங்கள், கனவுகள், அரட்டைகள், சோகங்கள் எல்லாம் சுமந்த கடை அது. குறிப்பாக வெள்ளிக்கிழமை பின்னேரங்களில் அவனோடு ஊர் சுற்றி திரிந்து விட்டு அந்த கடையில் போய் இருந்து சூப் குடித்து கிழங்கு சாப்பிடும் சுகம் வேற எந்த உணவிலும் நான் இது வரை ரசித்தது இல்லை.

வெள்ளிக்கிழமை, என் ஊரின் விசேட தினங்களில் ஒரு நாள். அன்று பின்னேரங்களில் என் ஊரு கடற்கரை களைகட்டும். என் ஊரின் பெரும் பகுதி குடும்பமாகவோ அல்லது நண்பர்களுடனோ அன்றைய பொழுதைக் கழிக்க அங்கு வந்து விடுவார்கள் . நம்ம பசங்களுக்கு என்ன வேலை இருந்தாலும் சரியான நேரத்துக்கு மோட்டார் பைக்ல அங்கே வந்துருவானுகள். நாங்க ரெண்டு பேர் மட்டும் என்ன விதிவிலக்கா? என் நண்பன் எதுல சொதபுறானோ இல்லையோ இதுல மட்டும் என்ன விட பேர்பெக்ட்டா இருப்பான். அதுவும் அவனுடைய ஆளும் அங்கு வாரயாம் என்பது தெரிந்தால் வியாழக்கிழமை இரவிலிருந்தே என் நிம்மதி போய்டும்.

இப்படி ரொம்ப ஜோலியா போயிட்டு இருந்திச்சி எங்க லைப். முதல் அடி நான் மேல் படிப்புக்காக என் ஊற விட்டுட்டு வெளி ஊர் வந்துட்டன். தொடர்ந்து அவன்கூட பழக முடியாட்டியும் அப்பப்போ அவன மீட் பண்ண கிடைக்கும். எப்போ நாங்க மீட் பண்ணினாலும் எங்களுக்கு உறைவிடம் அந்த கிழங்கு கடைதான். அடுத்தது அடி இல்ல இடி. அவன் வேலை காரணமாக வெளி நாட்டுக்குப் போய்ட்டான். அதுக்கப்புறம் நானும் ஊருக்கு முதல் மாதிரி போறதும் இல்ல. சில நேரங்களில் போனாலும் அவன் இல்லாமல் கிழங்குகடை வெறுமையாய் போனதாய் உணர்ந்தேன். அதனால் அங்கு போவதையும் நிறுத்திக்கொண்டேன்.இப்போ அவன் கூடத்தான் பேசிட்டு இருந்தேன். அவனை நேரடியாக சந்தித்து 2 வருடம் கடந்திட்டு.. ஏதோ அவன் போன மாதம் தான் சென்றது போல் இருக்கிறது.

{{{ரீங் ரெங்}}} {{{ரீங் ரெங்}}}
*********************************************

ஞாபக சுழற்சிக்குள் இருந்து என்னை எழுப்பிவிட்டது அந்த மொபைல் கால். மொபைல் எடுத்து காதுக்குள் வைத்துக் கொண்டு நேரத்தை பாக்கிறேன் அதற்குள் 1 மணி நேரம் கடந்து இருந்து.
"ஹலோ"

"அடேய் நான்தான் மச்சான்"

"சொல்லுடா இப்பதானடா ஆபீஸ் போறேன் எண்டு போன? வாட் ஹப்ண்டு?"

"நத்திங்டா இங்க வேல இல்ல ப்ரீ தான். நீ ப்ரீதானே?

"எஸ் மச்சி சொல்லு"

"இல்ல மச்சான் நம்ம கிழங்கு கடைல கிழங்கு சாப்பிடனும் போல இருக்குடா என்னமோ தெரியேல்ல திடீர் எண்டு தோணிச்சி"

இதற்க்கு மேல் என்னால் பொறுமையா இருக்க முடியாது என்பது போல் என் கண்ணீர் குப்பென்று வழிந்தது. கையால் துடைத்துக்கொண்டு "ஹி ஹி ஹி கிளம்பி வா மச்சி அதுக்கென்ன சாப்பிடலாம்" எண்டேன், வீதி அபிவிருத்திக்காக அந்த கடை உடைக்கப்பட்டு விட்டது என்று அவனிடம் சொல்லும் தைரியம் எனக்கு இல்லாமல்..

Post Comment

Wednesday, January 04, 2012

இரவுச் சத்தம்.

"உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....."

அழகான மௌனத்துக்குள் அலாரமாய் மாறி விட்டது அந்த சத்தம். இரவின் திடீர் விழிப்பு எவ்வளவு கொடுமை என்பதை உணர்ந்து கொண்டேன். என் அறை திறந்து வெளியே வந்தேன். நடந்தது என்னவென்று தெரியாமல் என் மொத்த குடும்பமும் விழி பிதுங்கி நின்றது. ஒருவரை ஒருவர் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டே வீட்டு வாசல் கதவைத் திறந்தோம்.

ஒரே ஆச்சரியம்!!! ஊரே ஒன்று கூடி என்ன மாநாடு நடத்துகிறது இந்த நடு இரவில்??

எல்லாரும் எங்களை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அவர்கள் பேச்சோடு பிஸியாகிவிட்டார்கள். அம்மா பெண்கள் பக்கமும், அப்பா ஆண்கள் பக்ககமும் செல்ல என் தம்பி திரும்பவும் அவன் அறைல போய் கதவ சாத்திக்கிட்டான். என் வீட்டுத் திண்ணையில் நான் தனித்து தூக்கக் கலக்கத்தோடு நின்றிருந்தேன். ஏதேதோ பேசிக்கொண்டார்கள். அவர்களை கவனிக்கும் அளவுக்கு என் கண்கள் விழித்து இருக்கவில்லை.
"வட் த ஹெல் ஆர் தீஸ் பீப்பில் டூஇங் திஸ் டைம்?" எண்டு கோபம்தான் வந்தது. ஒரு வழியா அப்பா வந்து சேந்தாரு. அப்புறம் அம்மாவும் வந்தாங்க.

செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் வந்த பின்பு நானும் அவர்களுடன் சேர்ந்து உள்ளே சென்றேன். மாநாடு முடிந்து விட்டது என்றும் தோன்றியது.

"அம்மா என்ன பிரச்சினை?"

"யாருக்கும் தெரியல்லடா, எல்லாரும் நாம கேட்டத போல சத்தம் ஒண்ட கேட்டாங்கலாம்" என்றார்.

"அட பாவிகளா என்ன விஷயம் என தெரியாமலே மாநாடா?" என நினைத்துக் கொண்டு நான் என் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டேன். என்ன நடந்தது என்று யோசிக்க தூக்கம் இடம் கொடுக்கவில்லை எனக்கு. எத்துனை மணிக்கு தூங்கினேன் எண்டு தெரியாது.

6.30 மணிக்கு எழும்பி மொபைல் எடுத்து பார்த்தேன். எழும்பும் போது உடல் சோம்பலாகத்தான் இருந்தது. அதுக்கு மேல தூங்க முடியாது. என் வீட்டு நிலைமை அப்படி. நேத்து அக்டிவ் பண்ணின சைலன்ட் மூட் அப்படியே இருந்தது. 25 மெசேஜ், 11 மிஸ்ட்டு கால். நமக்கு என்ன பில்கேட்ஸ்ட இருந்தா கால் வந்திருக்கப் போகுது? எல்லாம் நம்ம பசங்கதான். மெசேஜ் ரீட் பண்ண டைம் இருக்கல்ல. அப்போதான் என் மைண்ட்ல ஓடிச்சு. டுடே ஈவினிங் மேட்ச் இருக்கு எண்ட விஷயம். வெட்டிப் பசங்க காலைலயே ஆரம்பிச்சிடாங்க எண்டு மொபைல் தூக்கி சார்ஜ்ல போட்டுட்டு வெளிய வந்தேன்.

வீதியில் கிசு கிசுக்கும் சத்தம் கேட்டது. அது வரைக்கும் இரவு நடந்த விடயம் என் ஞாபகத்தில் இல்ல. "என்ன மறுபடியும் மாநாடா?" எண்டு அப்பா கிட்ட கிண்டலா கேட்டுட்டு சோபால இருந்தேன். அப்பா ஏதோ யோசனைல இருந்திருப்பார் போல பதிலே வரல.அப்படியே எழும்பி அவரும் கீழ போயிட்டாரு "அம்மா!!! அம்மா!!!!!" எந்த பதிலும் இல்ல. "ஒரு வேல இவங்களும் மாநாடு நடக்கும் இடத்தில் இருக்காங்களோ?" எண்டு நினச்சிட்டு வாஷ் ரூம் போயிட்டு வந்து காலை காபிக்காக வெயிட் பண்ணிக் கொண்டு இருந்தேன்.பெண்களுக்கே உரித்தான மாநாடு போடும் பழக்கம் என் அம்மாவுக்கு மட்டும் இல்லாமலா இருக்கும்.என் தம்பி இன்னும் அசந்து தூங்கிக் கொண்டுதான் இருந்தான். அவன் தூங்கினா என் வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்க பிகோஸ் அவன் சின்ன பாப்பாவாம். நான் அவன் வயசில் அதிகமா தூங்கினப்போ உதை வாங்கின சம்பவங்கள் உண்டு.

என் வீட்டு வானொலி படித்துக் கொண்டிருந்தது. 6 .45 செய்தி சொல்லும் நேரம் எண்டு கொஞ்சம் கூட்டி வச்சிட்டு மேட்ச்க்குத் தேவையான பொருட்களை எடுப்பதற்கு என் ஸ்டோர் ரூமுக்கு சென்றேன்.வானொலி செய்தி என் காதுகளுக்குள் இடியாய் ஒலித்தது.

"நேற்று நள்ளிரவு இலங்கையின் தெற்கு பிரதேசத்தில் சிறிய அளவில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. எந்த வித பாதிப்புக்களும் ஏற்படவில்லையெனவும் மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது....."

நடுங்கிய கைகள் என் மொபைலை தேட கால்கள் அதை நோக்கி ஓடியது...

Post Comment

தை பிறந்தால் வழி பிறக்கும்?

(சூரியன் fm இன் ரீங்கார நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தலைப்பில் எழுதப்பட்ட கவிதை இது. இவ்வருடத்தின் முதல் பதிவு என்பதால் இந்த கவிதை உங்கள் இவ் வருட சிந்தனைக்காகவும்..)


வலிகள், வதைகள்,
கொடுமைகள், கொடூரங்கள்...
இவர்களின் வாழ்வாகிப் போனது.

விலை மதிப்பற்ற செல்வம் கல்விக்காய்..
புத்தக மூட்டை சுமக்க வேண்டிய வயதில்,
அன்றாட பசி போக்க சில சில்லறை காசுகளுக்காய்..
சுமை மூட்டைகள் இவர்களின் முதுகில்.

வறுமையையும், பசியையும்
வாங்கிக் கொண்டு
இவர்கள் இழந்தது ஏராளம்.

கனவுகள் இல்லை,
கல்வியில்லை,
கருணையில்லை,
உடையில்லை,
உறவில்லை,
உறைவிடம் இல்லை.

தொடரும் இழப்புக்களுக்கு
நேரமின்மையால்
முற்றுப் புள்ளி வைக்கிறேன்.

மனக் கொதிப்பால் என்
கண்கள் கண்ணீரை கக்கிவிட
கவி வடிக்கிறேன் இவர்கள் விடிவுக்காய்.

மனிதனின் மனச் சட்டங்கள்
முடங்கிக் கிடக்கும் போது..
ஐ.நா சட்டமோ,
அரசாங்க சட்டமோ,
காப்பாற்ற போவதில்லை இவர்களை.

தெருக்களில்,
வேலைத்தளங்களில்
பிஞ்சுகள் பிழியப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நம் கண்களும், மனமும்
உறங்கி கொண்டதே தவிர
இன்னும் விழிக்கவில்லை.

"குழந்தைத் தொழிலாளிகள்."
தமிழில் மட்டும் அல்ல,
உலக மொழிகள் அனைத்திலும்
தவிர்க்கப் பட வேண்டிய வார்த்தை.

இச் சமூகக் கொடுமையை
தடுக்க இவ்வாண்டிலே
வழி சமைப்போம்.
நமக்கு நாம் வினா தொடுத்து
நம் மனச் சாட்சிகளை
விழிக்க வைப்போம்.

வரும் தைப் பிறப்பில்
இவர்களின் வலி நீங்கி
வாழ வழி பிறக்கட்டும்.
குழந்தையின்
சிரிப்பொலி கேட்டு
பூமி சுற்றட்டும்.

எல்லோரும் நம்புவது போல்
நானும் நம்புகிறேன்.
"தை பிறந்தால் வழி பிறக்கும்?"

Post Comment

Saturday, December 31, 2011

கொண்டாடவா புது வருடம்? (புதுவருட சிந்தனை )


ஏன் புது வருஷம்? எல்லாமே புதுசா மாறுமா அப்பா? இல்லடா கண்ணா... வருஷம் மட்டும் தான் மாறும்.
காலைல கடைக்கு சாப்பிட போன எனக்கு, காதில் விழுந்த மகன் அப்பா சம்பாஷனை. பையன் படு உசார் போல.. இப்பவே இப்படி யோசிக்கிறான் எண்டு நினச்சிட்டு வந்து, இத வச்சே நம்ம ஒரு மெசேஜ் சொன்ன என்ன எண்டு யோசிச்சன். விடுங்க பாஸ் நம்ம சுட்டது பையனுக்கு தெரியவா போகுது.

நானும் மாறப் போறது இல்ல, நீங்களும் மாறப் போறது இல்ல, வருஷம் மட்டும் மாறிக்கிட்டே போகுது. அதுவும் பெரிய மாற்றம் எதுவும் இல்ல 2011 இல் கடைசியில் இருக்கும் 1 இரண்டாக (2) மாறப் போகிறது. அவ்வளவுதான். இதில் என்ன சந்தோசம் என்பது மட்டும் புரியாப் புதிர்தான். அது சரி, அது தெரிஞ்சாதான் நான் ஏன் இப்படி புலம்ப போறேன்?

வருஷ தொடக்கத்தில் நல்லது ஒன்றை எடுத்து, தீயது ஒன்றை விட்டு விட வேண்டுமாம். யார் சொன்னது எண்டு ஆராய்ச்சி நடத்த நேரமில்லை. சாரி பாஸ். ஆனா இங்க என்ன நடக்குது? வருஷ ஆரம்பமே தீமைக்குதான் வழிவகுக்குது. உடன்பாடு இல்லாதவர்கள் நம்ம பாப்பைய்யா கிட்ட வேணும்னா பட்டிமன்றம் நடத்த சொல்லி முடிவெடுப்பம். இப்போ கொஞ்சம் முழுமையா வாசிச்சி பாருங்கோ.

வீண்விரயம், பொழுதுபோக்கு, மது, மாது, கேலிக் கூத்துகள்.... நன்மைகளா இவைகள்?

நம்ம கவிஞன் ஒருவன் அழகா சொன்னான் மத்தவன சந்தோசப்படுத்தி பாரு... நிறைவான சந்தோசம் அதுதான் எண்டு அவன் பேரு..... மறந்து போச்சு விடுங்க. நமக்கு அவன் பெயரும் மறந்து போச்சு அவன் சொன்னதும் மறந்து போச்சு.
நீங்களே சொல்லுங்க நீங்க எத்துன பேர் மாற்றுதிரனாளிகள்/ அனாதைகள்/ ஏழைகள் கூட உங்க கொண்டாட்டங்கள பகிர்ந்து கொண்டீங்க? நம்ம சந்தோசங்கள் நம்மளோட மட்டும் முடிஞ்சிட்டா அதுல எந்த திருப்தியும் இல்ல நம் சந்தோசம் மத்தவர்களுக்கும் பகிரப்படனும். அதுதான் உண்மையான சந்தோசம்.

பண்டிகை காலங்களில் வீண் விரயம் தான் அதிகம். எதற்கு? 2 நிமிட சந்தோசத்துக்காக 20 கோடிகள் செலவழிக்கப் படுகின்றன. காலங்கள்/ வருடங்கள் பல மாறிய போதும் நாம் மட்டும் மாறவே இல்லை. இன்றைய உலகம் இருப்பவனுக்கு கொடுக்கிறதே தவிர இல்லாதவனை நினைத்துகூட பார்ப்பதில்லை. சற்று யோசிப்போம்.

புது வருடம் பிறப்பது நம் வாழ்வை இன்னும் திட்டமிட்டு கடந்த வருட தவறுகளை திருத்தி வாழ்வை மேலும் சிறப்பாக்கி கொள்வதற்குத்தானே தவிர கொண்டாடி மகிழ்வதற்கு அல்ல. நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். என்ன செய்வது எந் நேரமும் உண்மைகள் இனிப்பதில்லை.

அப்புறம் இன்னொரு முக்கியமான விடயம்.... நம்மை விட்டு எதுவும் பிரியும் போது கவலை கொள்ளும் நாம் ஒரு ஆண்டு பிரிந்து மறு ஆண்டு தொடங்கும் போது ஏன் கொண்டாடுகிறோம்? உறவும் பிரிவும் ஒன்றாய் வரும் போது இச் சமூகம் உறவுக்கே முன்னுரிமை கொடுக்கிறது. இழப்பின் வலியை விட உறவின் அணைப்பு சிறந்தது.

பிறக்கும் புது வருடத்தில் சந்தோசங்கள் மலர இறைவனை வேண்டுகிறேன். வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Post Comment