இது முஸ்லிம்களுக்கான பதிவு. நீண்டதொரு வாதம், கலந்துரையாடல், கருத்து மோதலின் பின் தான் நான் இதை எழுதுகிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்னும் மன நிலையில் நான் இதை எழுதவில்லை என்பதையும் முதலில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் பெரிய மேதை எல்லாம் இல்லை. சாதாரண மனிதன். இது என் சிறிய மூளையில் உதித்த ஒரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சி.
விடயத்துக்கு வருவோம். இன்று எல்லோராலும் பேசப்படுகின்ற ஒரு விடயம் விஸ்வரூபம் திரைப்படமும் அதன் பின்னணியில் முஸ்லிம்களின் செயற்பாடுகளும். முதலில் முஸ்லிம்கள் பற்றி பேசுவோம் பிறகு கமல் பற்றிப் பேசலாம்.
சினிமாவுக்கு முஸ்லிம்கள் இவ்வளவு முக்கியத்துவம் ஏன் கொடுக்கிறார்கள் என்பது எனக்கு இது வரை விளங்கவில்லை? இஸ்லாம் தடை செய்த ஒன்றுக்காய் ஏன் இவ்வளவு பெரிய முக்கியத்துவம்? இதற்க்கு அவர்கள் சொல்லும் காரணம் சினிமா இன்று மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற ஒரு ஊடகமாய் மாறி இருக்கிறது. அதனூடாக நச்சுக் கருத்துக்களை பரப்ப முடியும் என்பதே. உண்மைதான் ஆனால் இஸ்லாத்தில் சினிமா என்பது எனக்குத் தெரிந்த அளவில் ஹராமான (தடை செய்யப்பட்ட ) விடயமாகும். அது இஸ்லாத்தில் தடை செய்யப் பட்ட பின்னர் அதை பற்றி பெரிதாக நீங்கள் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.
இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் இறைவன் "அந்தப் பக்கம் நீ போகாதே அது உன்னை காயப் படுத்தும்" என்று தடுத்து விட்டான். ஆனால் நாம் அங்கு போய் இருந்து கொண்டு "நான் சினிமா பார்க்க வேண்டும் ஆனால் என்னை காயப் படுத்தக் கூடாது" என்று கோஷமிடுவது முஸ்லிம்களுக்குரிய பண்பாகாது. இஸ்லாம் தடை செய்த ஒன்றுக்குள் நீங்கள் செல்லவே இயலாத போது அதை சீற்படுத்தவா முயற்சிக்கிறீர்கள்?
விளங்கிக் கொள்வதற்காக ஒரு சிறிய உதாரணம் பன்றி இறைச்சி உண்பது ஹராம் (தடை). பன்றி தடை என்றால் அதற்குள் நாம் சென்று இல்லை பன்றி தக்பீர் சொல்லி அறுக்கப் பட வேண்டும் என்று விவாதிப்பது/போராடுவது எந்த வகையில் நியாயமாகும். உனக்குத் தடை என்றால் நீ அங்கு செல்லவே கூடாது என்பது தானே முறை. இதை ஏன் நீங்கள் உணரவில்லை?
சினிமா, ஆடல், பாடல், இசை இவை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை. அதற்குள் நாம் சென்று எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதே எனது கருத்து.நமக்கு சம்மந்தம் இல்லாத இடத்துக்குள் நாம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும். ஒரு 3 மணி நேர திரை விளையாடல் பார்த்து ஒரு மார்க்கத்தை ஒருவன் விளங்க முற்பட்டால் அவனுக்குப் பெயர் முட்டாள்.
ஒரு சினிமாவுக்காக நீங்கள் நடத்திய போராட்டத்தால் அள்ளாஹ்வின் நாமமும், அவன் தூதரின் நாமமும், புனித இஸ்லாத்தின் நாமமும், எத்தனை தடவைகள் எவ்வளவு எழுத்துக்களால் காயப் பட்டிருக்கிறது என்பதை அறியவில்லையா நீங்கள்? மார்க்கம் தடை செய்த ஒரு விடயத்துக்காய் நீங்கள் நேசிக்கின்ற மார்கத்துக்கு நீங்களே அவப் பெயரை ஏற்படுத்தி விட்டீர்கள் போல் தெரிகிறது. முஸ்லிம் சகோதர்களே இது ஒரு சிறந்த அணுகு முறையாய் இருக்காது என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
குர்ஆன் சொல்வதைப் பாருங்கள்.
(முஃமின்களே!) “அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.(4:140)
கமல் ஹாசன் இஸ்லாத்தை அவமதின்றாரா? முஸ்லிம்கள் மனதை வேதனைப் பட வைகிறாரா? அவருடன் நீங்கள் சேர்ந்து இருக்க வேண்டாம். நட்பு பாராட்ட வேண்டாம். அவர் அக்கருத்தில் இருந்து நீங்கி உங்களிடம் மன்னிப்புக் கேட்டு திருந்தும் வரை.. இதுதான் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்னுடைய பார்வையில்..
ஆகவே யார் இம்மார்கத்தை அள்ளாஹ்வை அவனுடைய தூதரை பரிகாசிக்கின்றனரோ அவர்களை அவன் பார்த்துக் கொள்ளுவான். நீங்கலாக எதையும் செய்ய முயன்று உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். இன உறவுகளுக்கிடையில் பிரச்சினைகளை தோற்றுவிக்காதீர்கள்.
எமது சகோதரர்கள் முக நூலிலும், ட்விட்டர் என்னும் சமூக இணையத்தளங்களிலும் பிடித்த சண்டைகள் பரிமாறப்பட்ட கருத்துக்கள் மனித மொழிகளில் இருந்தே அகற்றப் படவேண்டிய சொற்களாக இருந்தது.(இக் கட்டுரைக்கான அவசியத்தை உணர்ந்ததுக்கான காரணம் இதுதான்)
கலைஞர்களே
உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்க வேண்டும். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மற்றவன் கழுத்தை நசுக்கக் கூடாது. அது சிறந்த படைப்பாகவும் இருக்க முடியாது. கமல் உங்களுக்கும் எனக்கும் எந்த உறவுமில்லை மனிதன் என்பதை தவிர. நான் சினிமாவை நேசிப்பவனும் அல்ல. ஆனால் இப் பிரச்சினைக்கேள்ளாம் உங்களுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு. இனி வரும் காலங்களிலாவது உங்கள் கலைப் படைப்பு யாரையும் துன்புருத்தாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் இஸ்லாத்தை முழுமையாப் படியுங்கள்.
மாற்று மத சகோதரர்களே
முஸ்லிம்களை பார்த்து இஸ்லாத்தை விளங்க முயற்சிக்காதீர்கள். அது சரியான நடைமுறையும் அல்ல. இஸ்லாத்தை விளங்க குர்ஆன், நபி மொழிகளைப் படியுங்கள். யாரிடமோ உள்ள குறைக்காக அவன் பின்பற்றும் மார்க்க சட்டங்களை, நல்ல மனிதர்களை, அவன் நம்புகின்ற இறைவனை உங்கள் சண்டையில் பலி கொடுக்காதீர்கள்.
இறுதியாக, என்னிடம் கூடுதலானவர்கள் கேட்ட விடயம் நீ விஸ்வரூபத்தை ஆதரிக்கிறாயா? எதிர்கிறாயா? உங்கள் எல்லோருக்கும் என் பதில் "நான் குழப்பங்களை தூண்டும் சினிமாவின் எதிரி".
பின் குறிப்பு : இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்கள் ஏதும் நான் சொல்லி இருந்தால் உடனடியாக சுட்டிக் காட்டவும்.