Wednesday, September 29, 2010

போதும்.......



ஆறுதலாய் 4 வரி உரைப்பாய்,
அவ்வப்போது தட்டிக் கொடுப்பாய்,
ஆகாயமாய் உயர்ந்து நிற்பாய்,
நட்பினால் அரவனைப்பாய்,
இன்று அடங்கிப் போனாய், அத்தனையும்
இழந்து விட்டு.

கனவோடு வாழ்ந்தவனல்லவா நீ...
கண்டாயா? வாழ்கை தந்த வடுக்களை.
வாழ்வெனும் தேவன் உன்னை
அடிமையாக்கி பல திங்களாயிற்று.
யாரிடமும் இல்லை உன் அடிமை விலங்கை
திறக்கும் சாவி.

கஷ்டப்படுகிறாய்,
காலம் திறக்கட்டும் உன் விலங்கை,
அது வரை காத்திரு நம்பிக்கையுடன்.
நம்பிக்கைதான் வாழ்வாம்
யாரோ சொன்னார்கள்.

ஒழிந்திருந்து ஒப்பாரியா?
நடத்து நடத்து.. நாடகமே வாழ்வாகிப் போன
உலகில் உன் நிஜமும்,
கொஞ்சம் கலக்கட்டும்...

வரண்ட பாலை வனத்தில் கண்ணீரா?
ஹா ஹா ஹா நீ நின்ற இடத்தை
குனிந்து பார்.
உன் வலியின் கண்ணீர் கூட வற்றியிருக்கும்
வரட்சியின் கொடுமையால்.

வாழப் போகிறேன் என்று தானே விடைபெற்றாய்.
வாழ்ந்தாயா?
ம்ம்ம் வாழ்ந்திருப்பாய்.
சில இருப்போடும், பழ இழப்போடும்

என்ன? கவியின் கடுமை சுடுகிறதா உன்னை..
இதெல்லாம் ஒரு சூடா உன் வாழ்வில்...

அறிந்து கொள் ஒரு வரி.
உன் அறிவைத் திறக்கும் ஒரு வரி.
போதும் என்று நினை,
உனக்கான பொழுது விடிந்து வெகு நேரமாயிற்று

தடுமாறுகிறாயா?
பிடித்துக் கொள் என் தோள்களை...
எப்போதும் அது உனக்குத்தான்,
நீ என் தோழன் ஆனாதால்.........

Post Comment

Saturday, September 25, 2010

வாழ்கை....!!!!!


உன் உருவம் காட்டும் கண்ணாடி போன்றது
உன் வாழ்கை
நீ எதை காட்டுகிறாயோ அதையே அது உனக்கு
பிரதிபலிக்கும்

நீ அறைகூவும் எதிரொலி போன்றது உன்
வாழ்கை
நீ என்ன சொல்லி அழைக்கிறாயே அதுவும்
அதையே சொல்லி உன்னை அழைக்கும்

உன் வாழ்கையின் அத்திவாரம் உன் தன்நம்பிக்கை
அதை நீ உறுதியாக இட்டுக்கொண்டால்
உன் கட்டிடம் நிலைநிற்கும்

உன் வாழ்கையின் மூச்சு உன் முயற்சி
அதை நீ நிறுத்திவிட்டால்
உன் வாழ்கை முடிவடைந்து விடும்

உன் வாழ்கையின் ஆரம்பம் உன் வெற்றி
அதை நீ பெற்றுக்கொண்டால் அமைதி அடைந்து கொள்
அது உனக்கு மேலும் ஒரு ஆரம்பமாயிருக்கும்

உன் வாழ்கையின் ஏணி தோல்வி
அதை நீ பெறா விட்டால்
உன்னால் மேற் செல்வது கடினமாகிவிடும்

உன் வாழ்கையின் இதயம் நல்ல குணம்
அதை நீ சுத்தப்படுத்தா விட்டால்
உன்னில் நோய் உறுவாகிவிடும்

உன் வாழ்கையின் உணவு பணம்
அதிகமாய் சாப்பிட்டால்
அது உனக்கு நஞ்சாக மாறிவிடும்

உன் வாழ்கையின் முகம் உன் காதல்
அதை நீ இழந்து விட்டால்
உன் உருவம் மதிப்பற்றதாகி விடும்

உன் வாழ்கையின் போதை அதுவே உனது மமதை
நீ அதை அருந்தி விட்டால்
உன் வாழ்வு தள்ளாடிவிடும்

உன் வாழ்கையின் வழிகாட்டி உன் ஆசான்
நீ அதை சரியாக தெரிவு செய்யாவிட்டால்
உன் திசை மாறிவிடும்

உன் வாழ்கையின் வெளிச்சம் உன் நண்பர்கள்
அதை நீ அனைத்து விட்டால்
உன் வாழ்கை இருளடைந்து விடும்

உன் வாழ்கையின் அமைதி உன் செல்வம்
உரிய முறையில் பயன்படுத்தாவிட்டால்
அதுவே உன்னை ஆபத்தை நோக்கி நகர்த்தும்

உன் வாழ்கையின் நஞ்சு பொறாமை
அது துளி உட்சென்றாலும்
உன் வாழ்வு முற்றுப் பெற்று விடும்

உன் வாழ்வின் சுவர்க்கம் உன் பெற்றோர்
அவர்களை நீ பிரிந்து விட்டால்
சுகமும் உன்னை விட்டுப் பிரிந்து விடும்

உன் வாழ்வின் போர்வை உன் மனைவி
அவளை நீ நிராகரித்தால்
உன் மானம் சென்று விடும்

உன் வாழ்வின் மேகம் உன் சொந்தம்
அவர்கள் இல்லாவிட்டால்
உன் பூமி மழையின்றி வரண்டுவிடம்

உன் வாழ்கையை எரிக்கும் நெருப்பு சந்தேகம்
அதற்கு நீ விரகூட்டினால்
உன் வாழ்வின் சாம்பலையும் கருக்கிவிடும்

உன் வழ்கையின் திருப்தி நிம்மதி
அதை நீ பெறாவிட்டால்
உன் வாழ்வு அற்தமற்றதாகிவிடும்

உன் வாழ்கையின் நோய் உன் கோபம்
அதை நீ சுகப்படுத்தா விட்டால்
அது உன்னை நோகடித்து விடும்

உன் வாழ்கையின் எல்லை இன்பம்
அதை நீ பெற்றுக் கொள்
அதுவே உன் வாழ்கையின் கவசம்

உன் வாழ்கையின் யதார்த்தம் துன்பம்
அதை நீ ஏற்காவிட்டால்
உன் மனிதம் மங்கிவிடும்

உன் வாழ்வின் முடிவு உன் மரணம்
அது உனக்கு நிகழ்ந்து விட்டால்
இச் சமூகம் உன்னை மறந்து விடும்

ஆகவே.......
ஒரு வெறும் தரை போன்றது உன் வாழ்கை
அதை நீ எவ்வாறு பயன்படுத்துகிறாயோ
அதன் விளைச்சல் உனக்குத்தான்
உனக்கு மட்டும்தான்

இன்று நன்மையை விதை தோழனே
நல்ல அறுவடையை பெறு
நாளை உன்னை வரவேற்கிறது
நேற்று உனக்கு விடை கொடுக்கிறது

இழந்ததை விட்டு விடு
இனி இருப்பதை பற்றிப்பிடி
இனிதே தொடங்கட்டும் உன் வாழ்வு
அன்றுதான் என் கவிக்கும் சாவு

Post Comment

Wednesday, September 08, 2010

அறிந்ததுன்டா நீங்கள்???



இன்றய இந்தப் பகுதியில் மற்றுமொரு விடயத்தைப் பற்றி பார்க்க இருக்கிறோம். கடந்த பதிப்பில் கடல் உள்ளாச பயணங்கள் சம்மந்தமான பதிவினை இனைத்திருந்தோம். அந்தப் பகுதிக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு இவ் விடத்தில் நன்றிகளை கூறிக் கொள்கிறோம்.
சரிங்க நம்ம விடயத்துக்குள் நுழைவோம். இந்தப் பகுதியில் உங்களுக்காக மீண்டும் நீருடன் சம்மந்தப்ட்ட தகவல்களைத்தான் கொண்டு வந்திருக்கிறோம். என்ன யோசனை இவன் நீரைவிட்டு வெளியே வரமாட்டான் என்று தானே. நான் என்னதான் பன்ன முடியும் நம்ம உலகில் அதிகமாக இடம் பிடித்திருப்பது நீர்தானே. அது தான் நீர் பற்றிய தகவல்களும் அதிமாய் இருக்கின்றன.

இன்றய இப் பகுதியில் உலகின் மிக நீளமான முதல் 10 இடங்களைப் பிடித்த நதிகளைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். வாங்க போகலாம்.

1.நைல் நதி(Nile) 6693Km
2.அமேசன் நதி(Amazon) 6436Km
3.யன்கேட்ஸ் நதி(Yangtze) 6378Km
4.ஹுஅன்ஹி நதி(Huang He) 5463Km
5.ஒப்லரடிய்ஸ் நதி(Ob-lrtysh) 5410Km
6.அமுர் நதி(Amur) 4415Km
7.லீனா நதி(Lena) 4399Km
8.கொங்கோ நதி(Congo) 4373Km
9.மெசிலிஎன்ஸி நதி(Mackenzie) 4241Km
10.மீகொங் நதி(Mekong) 4183Km

இவை தான் இந்தப் பகுதியினூடாக நாம் உங்களுக்கு இப்போது கொண்டு வந்திருக்கும் தகவல்கள். அந்த நதிகளில் தோன்றும் link கை பயன்படுத்தி அவை சம்மந்தமாக மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.
சரிங்க இன்றய நம்ம இந்தப் பகுதியில் இருந்து நீங்க பயன் அடைந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடை பெருகிறோம். மற்றுமொறு வித்தியமாசமான தலைப்புடன் மீண்டும் சந்திப்போம்.

Post Comment

Sunday, September 05, 2010

உயர்ந்தது நட்பா? (சுவைக்க ஒரு சூடான பகுதி

இது என்ன புதுசா ஒரு குழப்பம்? ஏன் இப்படி ஒரு கேள்வி? இதில் என்ன சந்தேகம்? என்று சொன்னாங்க சில பேர். நான் இந்தக் கேள்வியை அவர்களிடம் கேட்டபோது. ஆனா இதில் என்ன விஷேசம் என்றால் நான் கேட்ட கேள்விக்கு யாருமே விடை சொல்லவில்லை என்பது தான். அவர்கள் மாறி என்னிடம் கேள்வி கேட்டார்களே தவிர பதில்???????? சரிங்க இப்ப உங்ககிட்ட கேட்கிறேன் உயர்ந்தது நட்பா? தொடர்ந்து படிப்பதற்கு முதல் விடையை உங்க மனதுக்கு சொல்லிட்டு படிங்க.

ஆம் உயர்வானது நட்புத்தான் என்று நாம் எத்தனையோ விடயங்களில் கேள்விப் பட்டிருக்கிறோம். சினிமா, கதை ,கவிதை என்று நட்பை விபரிக்காத உபயோகப்படுத்தாத இடமேயில்லை எனலாம். நட்பு என்றால் என்ன என்ற கேள்வி நம்ம மனதில் எப்பயாவது தோன்றியதுண்டா? கொஞ்சம் யோசிங்க. அப்படி உங்களுக்கு தோன்றியிருந்தால் நீங்கள் இதை படித்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஏனெனில் விடை உங்களுக்கு கிடைச்சிருக்கும். சரிங்க நம்ம விஷயத்துக்குள் நுழைவோம்.

நட்பு என்றால் என்ன?
எச் சந்தர்பத்திலோ அல்லது எந்த சூழ்நிலைகளிலோ ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் இன்னொரு தனிமனிதனுடனோ அல்லது ஒரு குழுவிடனோ எதிர்பார்ப்புகள் இன்றி ஏற்படும் அன்பு தான் இந்த நட்பு என்று நாம் சுருங்கச் சொன்னாலும் இதற்கு ஒரு பொதுவான வரைவிலக்கனம் யாராலும் கொடுக்கப்படவில்லை. (எல்லாவற்றினதும் ஆழத்தை அறிந்த புலவர்களால் கவிஞர்களால் நட்பின் ஆழத்தை மட்டும் அறியமுடியவில்லை.) நட்பை பலவாறாக புகழ்ந்தவர்கள்தான் அதிகம். அது புனிதமானது என்று சொன்னவர்கள்தான் அதிகம். அது இல்லை என்றால் ஒன்றுமில்லை என்று சொன்னவர்கள்தான் அதிகம். நட்பை யாரும் குறைகூறியோ அல்லது கேவளப்படுத்தி பேசியோ நாம் கூடுதலாக கேட்டிருக்க முடியாது. எனவே இதெல்லாம் வைத்து பார்க்கும் போது நட்பு உயர்வானதுதான் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. நாம் இந்த நட்பை பற்றி இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு என்ன காரணம்? நிறைய இருக்கலாம். அது சிலவேளை சாதகமாகவும் சில வேளை பாதகமாகவும் இருக்கலாம். எந்த ஒரு விடயத்திலும் இரண்டு வாதங்கள் முன் மொழியப்படும் போது நட்பில் மட்டும் ஒரே வாதம் அதுதான் நட்பு வாதம் ஒரே கொள்கை அது தான் நட்புக் கொள்கை என்று நான் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை.

ஒரு மனிதன் நல்லவனோ கெட்டவனோ அனைவருக்கும் நட்பு என்பது பொக்கிஷமாகவே விளங்குகிறது.

இருந்தாலும் இந்த நட்பால் சங்கடப்பட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நட்பு எனும் கருவி கொண்டு நம்மை வீழ்த்தி விட ஒரு கூட்டம் நம் பின்னாலயே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் கொஞ்சம் நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். ஏன் சிலவேளை இது உங்கள் வாழ்கையிலும் நடந்திருக்கலாம். நாமே சில சமயம் சம்மந்தப்பட்டிருக்கலாம்.
எனவே நட்பு என்பது இரண்டு விடயங்களுக்கு வழி வகுத்து நிற்கிறது.
1. நல் வழி
2. தீய வழி

நல் வழிக்கும் தீய வழிக்கும் வழி சமைக்கும் நட்பை உயர்வானது என்று சொல்லலாமா? என்ற கேள்வி என் மனதில் ரொம்ப நாளாகவே ஓடிக் கொண்டிருக்குதுங்க. அதற்கு நான் கண்ட பதில் தான் இந்த தலைப்புக்கே காரணம். என் வாழ்விலும் நட்பு நாலா திசைகளிலும் விளையாடித்தாங்க இருக்கு. சரி என் சொந்த விஷயங்களை ஓரம் கட்டி பொதுவான விஷயத்துக்கு வருவோம்.

நான் நின்ற ஒரு பஸ் தரிப்பிடம்.... அங்கு நின்றவர்களிடம் என் வினாவைத் தொடுத்தேன்.

'தம்பி இந்த காலத்துல எவனையும் நம்ப முடியாது. நம்ம கூடவே இருந்து ஆட்டயப் போட்டிட்டு போய்யிடுவாங்க..'(ரொம்ப அடி வாங்கியிருப்பாரோ???) என்று ஆரம்பித்தார் அண்ணா ஒருவர்.

'நீங்க என்ன சார் சொல்ரீங்க நண்பன் என்டு நினைச்சி வீட்ல விட்டா என் அக்காவையே இழுத்துட்டு ஓடிட்டான்'(நீங்க ரொம்ப பாவம் சார்) என்றான் இன்னொருவன்.

'ஆமா சார் இந்த காலத்துல நண்பர்கள்ட கூட நடிச்சுதான் பழக வேண்டியிருக்கு'(இது என்னடா புதுக் கதை) என்று அவர்களுடன் ஒத்துப் போனான் இன்னொருத்தன்.

'நட்பில்லாமல் வாழ முடியுமா???'(சரியான கேள்வி) என்று விவாதம் தொடங்கினால் ஒரு யுவதி அவளின் தோழிகளோடு.

'நண்பர்கள் கூட அளவாக பழகினா நல்லம் தானே'(இது என்ன அரிசியா அளவு பார்த்து வாங்க) என்று அறிவுரை கூறினால் அங்கிருந்த ஒரு வயதான அம்மா.

'தம்பி இன்றய காலத்துப் பசங்களுக்கு நட்பின் கருவே தெரியல' (அப்ப உங்களுக்குத் தெரியுமா????) என்றார் இன்னொரு வயதான தாத்தா.

எனக்கும் அவர் மேல கொஞ்சம் கோபம் தான் இருந்தும் அவரின் கருத்து எனக்கும் சற்று நியாயம் என்று பட்டது. அதனால் எதுவும் பேசாமல் அவர்கள் சொன்ன செய்திகளோடு பஸ் ஏறினேன் நானும் ஒரு முடிவுடன்.

என்ன பார்க்கிறீங்க இத நீங்களும் கேட்டு இருக்கலாம் அல்லது பேசியிருக்கலாம். எனவே இன்றய காலத்தில் நட்பு அந்த தாத்தா சொன்ன மாதிரி அதன் தன்மையை பெருமதியை இழந்துள்ளதா?

இப்ப நம் முன்னாடி 2 கேள்விகள் இருக்குதுங்க.
1. நல் வழிக்கும் தீய வழிக்கும் வழி வகுக்கும் ஒரு விடயத்தை உயர்வானது என்று சொல்ல முடியுமா?
2. நட்பு தற்காலத்தில் அதன் தன்மையை இழந்துள்ளதா?

இவை இரண்டுக்கும் கிடைக்கும் பதில் தான் இந்த எழுத்துக்களின் நிலமையை புரட்டிப் போடப் போகிறது.


முதல் கேள்விக்கு பதில் அளிக்கும் முன் இரண்டாம் கேள்விக்கு பதில் கொடுப்பது சற்று சிறப்பாய் இருக்கும் என நினைக்கிறேன். அதாவது நட்பு இன்றய காலத்தில் அதன் தன்மையை இழந்துள்ளதா? இக் கேள்விக்கு விடை கொடுப்பதற்கு முன் சற்று ஒரு விடயத்தை தெளிவு படுத்த வேண்டியது என் கடமை கூட. அதென்ன தற்காலத்தில்? அப்போ அன்றய காலத்தில் நட்பு நட்பாக இருந்ததா? என்ற ஒரு சிந்தனை உங்க மனதில் வரலாம். நம்ம ஒரு பழ மொழி கேள்விப்பட்டிருப்போம் அதாவது உயிர் காப்பான் தோழன். இது பழ மொழி மட்டுமல்ல பழய வரலாறு கூட. இதற்கு மேலும் அந்த காலத்தைப் பற்றி நான் விபரிக்க தேவையில்லை. எனவே அந்தக் காலத்தில் நட்பு நட்பாகத்தான் இருந்தது என்பதற்கு நிறைய வாதிடலாம். அக் காலத்தில் நவீனம் இருக்கவில்லை ஆனால் நாகரீகம் இருந்தது உண்மையான நட்பு இருந்தது. இன்றய காலத்தில் அது சற்று கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது.

இந்தக் கேள்விக்கு நமக்கு விடை கிடைக்க வேண்டும் என்றால் நாம் நட்பின் அதாவது உண்மையான நட்பின் தன்மைகளை அறிந்து கொண்டால் நான் என்ன நீங்களே சொல்வீர்கள் நட்பு இன்றய காலத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதை.

முதலில் அதைப் பற்றி பேசலாம் வாங்க

1. சுயநலம் அறவே இருக்கக் கூடாது.
2. ஏதிர்பார்புகள் அற்றதாய் இருக்க வேண்டும்.
3. நம்பிக்கை காணப்பட வேண்டும்.
4. கருத்து மோதல்கள் காணப்பட வேண்டும்.
5. மரியாதையுடன் கலந்த மகிழ்சி இருக்க வேண்டும்.
6. மற்றவனின் கருத்துக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்
7. எந்த நேரத்திலும் உதவும் மனநிலை இருக்க வேண்டும்.

எனவே இது அடிப்படையாக இருக்க வேண்டிய பண்புகள். இவற்றில் ஒன்றை இழந்தாலும் அது நட்பின் தன்மையை இழந்து விடும். இதில் எல்லாம் சரி அது என்ன கருத்து மோதல்கள் இருக்க வேண்டும் என்று யோசிக்கிரீங்களா? ஆமாங்க நிச்சயமாய் நட்புக்குள் இது காணப்பட வேண்டும். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மிகவும் நெருக்கமாக பழகுகிறார்கள். இவர்களுக்கு இடையில் இருப்பது நட்பா? காதலா? என்று எவ்வாறு அறிவது? காதல் என்றால் அங்கே கருத்து முரண்பாடுகள் குறைவாகவும் நண்பர்கள் என்றால் மிக அதிகமாகவும் காணப்பபடும்(பொதுவாக). எனவே இதுவும் அடிப்படை பண்புகளில் ஒன்றுதான்.

இப்ப யோசிங்க இன்றய காலத்தில் நட்பு அதன் தன்மையை இழந்துள்ளதா? இல்லையா? நிச்சயமாக இழந்துள்ளது. அடிப்படை தன்மைகளில் முதலாவது தன்மையிலயே நம் நட்பு நின்று விடுகிறது. இக் காலத்தில் சுயநலம் அற்றவர்களை பார்க்கவே முடியாது. எனவே நட்பு இன்றய காலங்களில் அதன் தன்மையை இழந்து வருகிறது என்பது தான் நிஜம்.

இன்றய நவீன உலகத்தில் நண்பர்கள் தேடுவது என்பது பெரிய விடயமே இல்லை.(Facebook, twitter etc....) ஆனால் அவ்வாறு நாம் தேடிய நண்பர்கள் நட்பின் தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்களா? அல்லது நாம் அவர்களுடன் நட்பின் தன்மை வரையறை கொண்டு பழகுகிறோமா??? என்றால் 1% மட்டுமே அல்லது அதனிலும் குறைவு. அன்று நண்பனுக்கு ஆபத்தான நிலைகளில் உயிரைக் கொடுக்கவும் உதவி செய்யவும் துணிந்த நட்பு இன்று வெறுமனே கேலிக்கும் அரட்டை அடித்தலுக்கும் நேரத்தை வீண் விரயமாக்குவதற்கும் தான் பயன்படுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. தேவையென்றால் பேசலாம் இல்லை என்றால் bye என்று சொல்லும் நண்பர்கள் தான் இன்று அதிகம். நண்பன் தன் உதவி தேடி வருகிறான் என்று அறிந்தால் ஒழிந்து கொள்ளும் நண்பர்கள்தான் இன்று அதிகம்.

எதிர்பாற்பற்றது நட்பு. ஆனால் இன்று சில தேவைகள் முடிய வேண்டும் என்பதற்காகவே சிலருடன் நட்பு. ஆகவே அன்றய கால கட்டத்தில் நட்பின் தன்மை மாறுபட்டதோ இல்லையோ அது எனக்குத் தெரியாது அக் காலத்தில் நான் வாழவும் இல்லை. ஆனால் இக் காலத்தில் நிச்சயமாக மாறியிருக்கிறது. வெறும் வாய்ப் பேச்சால் மட்டும் அலங்கரிப்படக் கூடிய ஒரு உயிரற்ற பொருள்தான் இன்று என்னுடைய பார்வையில் நட்பு. இதனால் தான் நட்பு இன்று தீய விடயங்களுக்கும் வழி வகுக்கிறுது.


நல் வழிக்கும் தீய வழிக்கும் இடம் கொடுக்கும் நட்பை உயர்வானது என்று சொல்லலாமா? ரொம்ப சிக்கலில் மாட்டிக் கொண்டேன் இந்தக் கேள்வியை என் நண்பர்களிடம் கேட்டு. நட்பு நல்ல விடயம் தானே அது ஏன் தீய வழிக்கு வழி சமைக்கிறது? அவர்களுக்கு விளங்கப்படுத்தியே என் வாய் அடைத்துவிட்டது. நட்பு என்ற களத்தைப் பயன்படுத்தி தீயவர்கள் இலகுவாக உங்களை ஆட்கொள்ள முடியும் என்று நான் உறுதிப்படுத்திய போது சற்று யோசித்து விடை சொன்னார்கள்.

சிலர் 'ஆம் அது நல்ல வழிக்கு வழி காட்டுகிறது நாம் ஏன் தீயதை பார்க்க வேண்டும் நல்லதை மட்டும் யோசிக்கலாமே'( ரொம்ப பெரிய மனசு சார்)என்றார்கள். இன்னும் சிலர் 'இல்லை நட்பை பயன்படுத்தி தீயவைகள் நடை பெருகின்ற போது அதை உயர்ந்தது என்று கூறமுடியாது'(அட பாவிகளா) என்றார்கள். மிகுதிப் பேர் 'வாழப் போகும் கொஞ்ச நாளில் இந்த ஆராய்சி ஏன் உமக்கு'(நல்ல பதில்) என்று ஒதுங்கிக் கொண்டார்கள்.

சரிங்க இப்ப நம்ம முடிவெடுக்க வேண்டிய தருணம் அதற்கு முதல் இந்த விடயத்துக்கு நான் முடிவெடுத்த முறையை விளக்குவது என் கடமை கூட. நட்பில்லாமல் ஏதாவது வேறு ஒரு விடயத்தை உதாரணமாக எடுத்து நான் பல பேரிடம் வினவினேன். இந்த விடயத்தில் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது. இதை நாம் உயர்வானது என்று சொல்ல முடியுமா எனக் கேட்டபோது இல்லை என்ற பதிலே உயர்ந்து நின்றது. இல்லை என்று பதில் சொன்னவர்களிடம் நட்பு பற்றி கேட்ட போது தடுமாறினார்கள். அப்போ நட்புக்கு மட்டும் நீதி தேவையில்லையா? என்ற தீர்மானத்தில்..... நன்மையும் தீமையும் இருக்கும் ஒரு விடயத்தை நிச்சயமாக உயர்வானது என்று சொல்ல முடியாது நட்பாய் இருந்தாலும் சரி. நன்மையுடன் தீமை கலக்கும் அடுத்த நிமிடமே அது கலங்கப்பட்டு விடுகிறது. எனவே நட்பை புனிதமானது என்றோ உயர்வானது என்றோ கூற முடியாது.(என்ன செய்வது சில உண்மைகளை சொல்லித்தான் ஆக வேண்டும்).

ஒரு சராசரி மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள். அவனிடம் நற்பண்பும் தீயபண்பும் இருக்கிறது. இவன் செய்யும் அத்தனை நல்ல விடயங்களையும் இவனால் விடப்படும் தவறு தகர்த்து இவனை இச் சமூகத்துக்கு கெட்டவன் என அடையாளப்படுத்தி விடும். இது போன்றுதான் இன்றய நட்பின் நிலமையும். நட்பில் புனிதம் இருந்தாலும் தூய்மை இருந்தாலும் இன்றய காலகட்டத்தில் நட்பினால் ஏற்படும் தீய செயல்கள் அதிகமாய் காணப்படுவதாலும் சமூகத்தில் ஏற்பட்ட நட்பை பற்றிய தவறான செய்திகள் காரணமாகவும் நட்பில் இன்று தீயவிதமான பார்வைகளே படிந்துள்ளன.

அது என்ன தீய செயல்கள் அதிகமாய் காணப்படுகிறது என்ற கேள்விகள் உங்க மனதில் ஓடலாம். சற்று விளக்குவது என் கடமை.

ஒரு வீதியோரத்தை தெரிவு செய்யுங்கள். அது நண்பர்கள் கூடும் ஒரு பிரதேசமாக இருகட்டும். அங்கு ஒரு 10 நிமிடம் நின்று வேடிக்கை பாருங்கள். அந்த நண்பர்கள் வட்டாரம் செய்யும் கேலிக்கைகளால் அவர்கள் மீது சமூகம் வீசும் பார்வை காவலிகள், தெருப் பொருக்கிகள், என்றெல்லாம் தவறான கூற்றுக்கள். அவர்கள் மீதும் படிந்து நட்பின் மீதும் படிந்து விடுகிறது. என்ன பார்க்கிரீங்க யாரோ செய்யும் பிழைக்கு நட்பு எப்படி பொருப்பெடுக்கும் என்று? தானே. விளங்குது உங்க தவிப்பு என்ன செய்வது சமூகத்தில் ஆரம்பத்தில் இருந்தே இந்த தவறான எண்ணம் குடி கொண்டு விட்டதால் நாமும் அதனுடன் ஒட்டி ஓட வேண்டியிருக்கு என்பது தான் யதார்த்தம்.ஆகவே ஒரு விடயத்தை பின்பற்றுகின்ற மனிதர்களை வைத்து அந்த விடயத்தை கணக்கிடும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்று இவ் விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியதும் எனது கடமை தான். இப்படித்தாங்க பிரச்சினைகள் தோற்றமெடுக்க ஆரம்பிக்கும்.

எனவே இவற்றை தடுக்கும் பொருப்பை நாம் சம்மந்தப்பட்ட அந்த நண்பர்களிடமே கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வோம். ஆனால் ஒரு விடயம் எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒரு விடயம் தான் நன்மைகளை தீமைகள் அழித்து விடும் என்ற எண்ணக் கரு. எனவே அதனடிப்படையிலும் தீமையுடன் கலந்திருக்கும் நட்பை உயர்வானது என்று சொல்ல முடியாது. இன்றய கால கட்டத்தில் வாழ்தப்படும் நட்பை விட தூற்றப்படும் நட்புகளே கூடுதலாக காணப்படுகிறது என்று நான் சொல்வதை விட நீங்கள் அன்றாடம் கேள்விப்படும் தகவல்களும் நடைபெறும் சம்மவங்களும் போதுமானது. ஆக மொத்ததில் நட்பை உயர்வானது என்று சொல்ல முடியாது.

அப்படியென்றால் தீர்வு அது இன்றய அனைத்து நண்பர்களின் கையிலும் தான் தங்கி உள்ளது. அவர்கள் மாறும் வரை நட்பு மாறப் போவதில்லை.

இருதியாக நாம் முடிவுக்கு வரலாம். அது என்ன? நட்பு இன்றய காலகட்டத்தில் அதன் தன்மையை இழந்து வேறு ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதனால் அதனால் ஏற்படக் கூடிய நன்மைகளை விட தீமைகள் அதிகமாகி அதன் புனிதத் தன்மையை இழந்துள்ளது.

எனவே 'தீய விடயங்களுக்கும் வழிசமைக்கும் அதே நேரத்தில் தன் புனிதத்தையும் இழந்துள்ள நட்பை உயர்வானது என்று இன்றய காலத்தில் கூறமுடியாது.'

சந்தர்பங்கள் சூழ்நிலைகள்தான் நட்பை இவ்வாறு மாற்றியிருக்கிறது என்று எவறாவது சொன்னால் நான் அவருடன் வாதிடத் தயார் 'ஆம் அந்த சந்தர்பத்தை ஏற்படுத்தியது நாம் தான்' என்று அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வரை.

ஆனால் இந்த நட்பு இன்றும் சற்று வாழக் காரணம் சில நண்பர்கள் இன்றும் நட்பின் தன்மையை இழக்காததுதான். நாம் அனைவரும் அதற்கு முயற்சிக்க வேண்டும்.

இந்த நட்புக்கு இருக்கும் ஒரு விஷேட தன்மையை சொல்லி இந்த தொடரை முடிக்கிறேன்.
அதாவது உறவுகளில் எந்த உறவுக்கும் இல்லாத ஒரு விஷேசம்.

தாய், தந்தை, கணவன், மனைவி, காதலி, காதலன், சகோதரன், சகோதரி இவ்வாறு எந்த உறவுக்குள்ளும் நட்பை இனைக்கலாம். இனைத்தால் அந்த உறவின் தன்மையை அது பாதிக்காது. உதாரணமாக சகோதரியுடன் நட்பை இனைத்தால் இந்த சகோதரத்துவம் பாதிக்காது அதே நேரம் அதே சகோதரியுடன் காதலி என்ற உறவையோ அல்லது மனைவி என்ற உறவையோ சேர்க்க முடியாது.

அப்படிப்பட்டது நட்பு. இன்று அதன் தன்மையை இழந்து நிற்கிறது காரணம் நாம். எனவே நட்பை நட்பாக மதிக்க நாம் அனைவரும் முன் வரவேண்டும். வெறும் கேலிக்கும் கூத்துக்கும் மட்டும் நட்பை பயன்படுத்தாமல் சாதனைகளுக்கும் சாதிப்பதற்கும் பயன் படுத்த வேண்டும்.

நட்பை உயர்த்த நட்புடன் ஒன்றினைவோம்.

இது என் தனிப்பட்ட கருத்துதான். வாழ்தி வரவேற்பதா? தற்கித்து தகர்பதா? இரண்டுக்கும் நான் தயார்.... நீங்கள்?????????;


Post Comment

Thursday, September 02, 2010

பள்ளிப் பருவக் காதல்............


மறக்க முடியாத நினைவில்
அனைவரும் மறக்கத் துடிக்கும்
ஒரு நினைவு.......

ஈறாரு வயதினிலே இயல்பான
மனிதர்களுக்கு துளிர்விடுகிறது
இந்த இயல்பான காதல்

கண்களில் தொடங்கி கடிதத்தில் வளர்ந்து
நண்பர்களின் தைரியத்தில் கிளைவிட்டு
ஆலமரமாய் வளர்ந்தாலும் சில வேளை
வெட்டி வீசவும் படுகிறது...

வெற்றியோ தோல்வியோ....
இதன் நினைவு மட்டும் எப்போதும்
இனித்துக் கொண்டேயிருக்கும்
மறுபடி வாழ்ந்து பார்க்க
மனம் ஏங்கும் இந்தக் காதலுடன்...

நான்கு பக்க சுவருக்குள்
நண்பர்களுடன் இருக்கும் போதே
கண்களால் மட்டமே பேசும்
இந்தக் கள்ளக் காதல்.

ஒவ்வொரு நாளும் அவள் செல்லும் வழிபார்த்து
காத்திருந்து அவள் பார்வை பட்டவுடன்
தனியாக சிரித்து 10 அடி பின்னால் பாடசாலை செல்ல
பாதைகளும் என்னை கிண்டல் செய்யும்

வகுப்பறையில் அவள் திரும்பும் தருணம்
எதிர்பார்த்து பாடங்களை புறக்கனித்து
கிடந்த காலங்கள்..... இன்று நினைக்கும் போது
மெய் சிலிர்கிறது

இடைவேளை நேரங்களில் இடைவிடாமல்
அவள் பின்னால் சென்று வாங்கிய
கிண்டல்கள், அவமானங்கள் இன்று
இவை எல்லாம் கானல்நீராய் கரைந்து விட்டது

பாடசாலை விட்டவுடன் மீண்டும் பாதுகாவலன்
வேளையை பொருப்பெடுத்து அவள் வீடு வரை சென்று
வழியனுப்பி மீண்டும் வீடு திரும்பி வாங்கிய
கால் வலிகள் எல்லாம் இன்று காணாமல் போய்விட்டது

விருப்பப் பாடங்களையும் விரும்பியவளுக்காக
தியாகம் செய்து அவளைப் பார்பதற்காகவே
தவம் கிடந்த நாட்கள் எல்லாம் இன்று மாறிவிட்டது

பகுதி நேர வகுப்புக்களிலும் அவள் செல்லும்
வகுப்புகளுக்கு மட்டுமே சென்ற கால்கள்
வீட்டுப் பயிற்சி கூட செய்யாமல் அவளுக்காக
மட்டுமே கடிதம் எழுதிய கைகள்
அவள் பெயரை மட்டுமே எப்பொழுதும்
உச்சரிக்கும் என் நாவு
அவளைப் பற்றிய எண்ணத்திலே இயங்கிய
என் இதயம்
இன்று அவள் இல்லாத என்னை கேலி செய்கின்றன......

அவளை ஒரு நொடி பார்பதற்காக
அவள் வீடிருக்கும் வீதியில் 4மணி நேரம்
காத்திருந்த காலங்கள்
அவளின் அப்பாவை கண்டு பயந்து
நடுங்கிய நிமிடங்கள்
அவளுடன் பேசுவதற்காக தொலைபேசி
எடுத்து அவளின் அம்மாவிடம்
மாட்டிக் கொண்டு திக்கித் திணரிய தருணங்கள்
அவளின் புகைப்படத்தை யாருக்கும் தெரியாமல்
மறைத்து வைத்து அழகு பார்த்த வினாடிகள்
அவளைப் பார்த்து எழுதிய கிருக்கல் கவிதைகள்
அவளுக்காக என் நண்பர்களுடன்
போட்ட முட்டாள்தனமான சன்டைகள்
அவள் நினைவோடு மட்டும் கனவில்
வாழ்ந்த இரவுகள்
இவை யாவும் இன்று என்னை விட்டு மறைந்து விட்டன.....

ஆனால் அவளின் பூ முகம் மட்டும்
என் நெஞ்சை விட்டு மறையவுமில்லை
நான் மறக்கவுமில்லை
அவளைப் பிரிந்து
சென்ற போது என்னுல் ஏற்பட்ட
இழப்பில்லாவலியுடன்

என் முதல் காதலும் அதுதான்
என் முடிவான காதலும் அதுதான்

என் பசுமை நினைவாக மாறி விட்ட
அந்த நாட்கள் என் மரணத்திலும்
மறக்காது............................

Post Comment

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் ஆரையம்பதி மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கை.

Kattankudi Web Community.
அன்மைக் காலமாக ஆரையம்பதி பிரதேசத்தில் காத்தான்குடி முஸ்லிம் சமூகத்திற்கெதிராக பல்வேறு விஷமத்தனமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதையிட்டு நாம் மிக வேதனையும், கவலையும் அடைகின்றோம்.

ஆரையம்பதிப் பிரதேசத்தில் அன்மையில் நடாத்தப்பட்ட காத்தான்குடி மக்களுக்கெதிரான அடையாள உண்னாவிரதம் மற்றும் சமீபத்தில் வெளிவந்த துண்டுப் பிரசுரங்கள் அனைத்துமே எம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காத்தான்குடி முஸ்லிம்களும் மன்முனைப்பற்று தமிழ் சகோதரர்களும்; ஒருவரை ஒருவர் புரிந்து இன ஐக்கியத்துடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்துவரும் இன்றைய சூழ் நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் ஆரோக்கியமானதாக அமையாது என நாம் கருதுகின்றோம்.

கடந்த கால போர்ச் சூழலில் தமிழ் சகோதரர்கள் அனுபவித்தது போன்று காத்தான்குடி முஸ்லிம்களும் மன்முனைப்பற்றுப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களும் பல்வேறு இழப்புக்களையும், துயர்களையும் சந்தித்தவர்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

காத்தான்குடிப் பள்ளிவாயல் படுகொலை, காத்தான்குடி முஸ்லிம்கள் ஹஜ் இருந்து வரும்போது அம்பலாந்துறையில் வைத்துக் கடத்தப்பட்டமை, சிகரம், கீச்சான்பள்ளம், ஒல்லிக்குளம், மன்முனை, பாலமுனை, காங்கேயனோடை கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து மீளக் குடியமர்ந்தமை போன்ற பல்வேறு விடயங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

காத்தான்குடி முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்வேறு காணிகள் இன்னும் அடாத்தனமாக பிடிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டு வருவதையும் அவை அரச காணிகள் என்று அரச அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்படுவதை நாம் இங்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

இந்நிலையில் கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்து இன ஐக்கியம், நல்லுறவு, ஒற்றுமை என்பவற்றைக் கருத்திற் கொண்டு இரண்டு சமூகங்களும் வாழ்ந்து வரும் இன்றைய சூழ் நிலையில் காங்கேயனோடை வீட்டுத்திட்டத்தை காரணம் காட்டி தமிழ் முஸ்லிம் உறவுக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் மோசமான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகும்.

யுத்தத்தினாலும், சுனாமி அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள மன்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்காக நிர்மானிக்கப்படவுள்ள ஈரான் நாட்டின் உதவியிலான வீட்டுத்திட்டத்தை தடுத்து நிறுத்தி அதன் மூலம் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டாமென தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

யுத்தம் மற்றும் சுனாமி போன்;ற அனர்த்தங்களினால் வீடுகளை இழந்த மன்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள ஏழை மக்களுக்கு முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் இவ்வீட்டுத் திட்டத்தை அமைத்து அதே பிரதேசத்திலுள்ளவர்களுக்கு அவ்வீடுகளை வழங்குவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பங்கம் விளைவித்து, மன்முனைப்பற்று பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களின் மனங்களை புண்படுத்த வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

எனவே, எந்தப்பிரச்சினையாக இருந்தாலும் இரண்டு பிரதேசங்களிலும் இருக்கின்ற சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றாக கூடி கலந்தாலோசித்து அப்பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்பதை நாம் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

காத்தான்குடி முஸ்லிம்களுக்கு எதிரான தேவையற்ற பிரச்சாரங்களை முன்னெடுத்து பொது மக்களிடையே காணப்படும் சமூக நல்லுறவை சீர்குலைக்க வேண்டாமென தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

இவ்வண்ணம்

அல்-ஹாஜ். எஸ்.எச்.எம். இஸ்மாயில்
தலைவர்

அஷ்ஷெய்க். ஏ.எல்.எம். ஸபீல் (நளீமி)
செயலாளர்

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் காத்தான்குடி

Post Comment

ஆட்ட சதியில் ஈடுபட்டவீரர்களுக்கு தடை விதிக்க முடியாது: இம்ரான்கான்.


Virakesari.
பாகிஸ்தான் வீரர்கள் ஆட்ட சதியில் ஈடுபட்டது குறித்து அந்நாட்டு முன்னாள் அணி தலைவர் இம்ரான்கான் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆட்ட சதியில், போட்டிக்;கும் வேறுபாடு உண்டு. ஒரு வீரர் வேண்டுமென்றே நோபால் வீசுவதால் ஆட்டத்தின் முடிவு பாதிக்காது.

பாகிஸ்தான் வீரர்கள் ஆட்ட சதியில் ஈடுபட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் அவர்களுக்கு இதுகுறித்து விளக்கம் அளிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Post Comment

இரு கால்களுடன் ஜனவரியில் பிறந்த ஆடு இன்னமும் உயிருடன்!


Virakesari.
சீனாவின் சாண்டொங் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 2 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டியொன்று இன்று வரை உயிர் வாழ்ந்து வருவது அனைவரினதும் கவனத்தினை ஈர்த்துள்ளது.

எனினும் இதன் நீண்ட ஆயுட்காலம் தொடர்பாக அமெரிக்காவைச்ச் சேர்ந்த விலங்கியல் நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேற்படி ஆட்டுக் குட்டியானது சாண்டொங் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு சொந்தமானதாகும்.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த அவ்விவசாயி இக்குட்டி பிறந்தவுடன் இதன் உருவத்தைக் கண்டு இதன் ஆயுட்காலம் தொடர்பாக தாம் சந்தேகம் கொண்டதாகவும் எனவே இதனை தாம் குப்பையில் வீசிவிட எண்ணியிருந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

"இது தற்போது குட்டியாக இருப்பதால் பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஆனாலும் இது 125 பவுண்ட்ஸ் எடை வரை வளரக் கூடியது. எனவே எதிர்காலத்தில் இந்தப் பாரத்தினை இவ்விரு கால்களினால் மட்டும் தாங்கிக் கொள்ள முடியாது" என விலங்கியல் பராமரிப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதற்கான நிரந்தரத் தீர்வு செயற்கையாக மேலும் இரு கால்களைப் பொருத்துவதே எனவும் ஆலோசனை தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக இவ்வாறு அதிசயத்துடன் பிறக்கும் ஜீவராசிகள் பிறந்த ஓரிரு தினங்களில் இறந்து விடுவதுண்டு. ஆனால் இந்த ஆட்டுக் குட்டிக்கு ஆயுசு கெட்டித் தான் போலும். கடந்த எட்டு மாதங்களாக உயிருடன் இருக்கின்றதே...!

Post Comment

ஜிமெயில் 'ப்ரயோரட்டி இன்பொக்ஸ்'.

Virakesari.
கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail) என்பது பிரபல மின்னஞ்சல் சேவை. பல்வேறு நவீன வசதிகளை தமது பாவனையாளர்களுக்கு கூகுள் வழங்கி வருகிறது.

தற்போது கூகுள் தனது ஜிமெயில் பாவனையாளர்களுக்குப் புதியதொரு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இவ்வசதியானது ' ப்ரயோரட்டி இன்பொக்ஸ்' என அழைக்கப்படுகின்றது.

இது பாவனையாளர் ஒருவர் பெற்றுக் கொள்ளும் மின்னஞ்சல்களை அதன் முக்கியத்துவ அடிப்படையில் வேறுபடுத்துவதாகும்..

இதன் போது பாவனையாளரின் இன்பொக்ஸ் 3 பிரிவுகளாக பிரிக்கப்படும்.

முக்கியமான மின்னஞ்சல்கள் 'இம்போர்ட்டன்ட் அண்ட் அன்ரெட்' பிரிவுக்குள் உள்ளடக்கப்படும். மற்றைய மின்னஞ்சல்கள் அடுத்தடுத்த பிரிவுகளுக்குள் சேர்க்கப்படும்.

இம்மின்னஞ்சல்களை வேறுபடுத்துவதற்காக ஜிமெயில் சில விசேட சமிக்ஞைகளை உபயோகப்படுத்துகின்றது.

நாம் அதிகமாக எவரிடமிருந்து மின்னஞ்சல்களினை பெறுகின்றோம் மற்றும் பதிலளிக்கின்றோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு இத்தொழிற்பாடு நடைபெறுகின்றது.

மேலும் மின்னஞ்சல் கணக்கில் காணப்படும் '+' பட்டன் மூலம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களையும் ' - ' பட்டன் மூலம் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவற்றையும் குறிப்பிட்டுக் கொள்வதன் மூலமும் மின்னஞ்சல்களை வேறுபடுத்திக் கொள்ளலாம்.

கூகுள் நிறுவனமானது கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாகத் தனது ஜிமெயில் பாவனையாளருக்கு அறிமுகப்படுத்திவரும் 3ஆவது நவீன வசதி இதுவாகும்.

தொடர்புகளை நிர்வகிக்கும் ( கொன்டாக்ட் வசதி) வசதி, அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி என்பனவே அவையாகும்.

(காணொளி இணைப்பு)

Post Comment

பார்வையிழந்தோருக்காக செயற்கை கார்னியா கண்டுபிடிப்பு.


Virakesari.
பார்வையற்றோருக்கு புது நம்பிக்கையூட்டும் வகையில், புதிய செயற்கை கார்னியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைப் பொருத்துவதன் மூலம் இழந்த பார்வையைத் திரும்பப் பெற முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஸ்வீடன், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு இந்த புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கண் பார்வைக்கு மிக முக்கியமானது கார்னியா எனப்படும் கருவிழி. அது பாதிக்கப்பட்டார் பார்வை பறிபோகும். இந்த நிலையில் இந்த கார்னியாவை செயற்கையாக உருவாக்கி மூன்று நாட்டு விஞ்ஞானிகள் குழு சாதனை படைத்து, பார்வையற்றோருக்கு புதிய வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து ஆய்வுக் குழுவில் இடம் பெற்றவர்களில் ஒருவரான ஒட்டாவா மருத்துவமனை ஆய்வுக் கழக டாக்டர் கிரிபித் கூறுகையில், செயற்கை கல்லோஜனை பயன்படுத்தி இந்த செயற்கை கார்னியாவை உருவாக்கியுள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த செயற்கை கார்னியாவை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பொருத்து ஆய்வு செய்தோம்.

அதில் ஆய்வுக்குட்பட்டோருக்கு நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இந்த செயற்கை கார்னியாவை கண்ணில் பொருத்துவதன் மூலம் பாதிப்புக்குள்ளான பகுதியில் செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு பார்வை திரும்ப வாய்ப்பு ஏற்படுகிறது.

கிட்டத்தட்ட கான்டாக்ட் லென்ஸ் போல இந்த செயற்கை கார்னியா பொருத்தப்படுகிறது என்றார்.

Post Comment

ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் இனி தங்கும் காலம் குறைவு.


Virakesari.
ஈராக்கில் தாக்குதல் நடவடிக்கையை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மேலும், வேகமாக அங்கிருந்து அமெரிக்க இராணுவத்தினரை திரும்பப் பெறுவதில் அதிபர் ஒபாமா தீவிரமாக இருக்கிறார்.

அமெரிக்க அதிபராக இருந்த புஷ், 2003ஆம் ஆண்டு படைகளை அனுப்பி சதாம் உசேனுக்கு எதிராக போர் தொடுத்தார். அது முதல் கொண்டு அமெரிக்க படைகள் ஈராக்கில் தங்கி விட்டன.

தற்போதைய அதிபர் ஒபாமா தேர்தல் பிரசாரத்தின் போது, அமெரிக்க படைகளை வாபஸ் பெற போவதாக தெரிவித்திருந்தார். இவரது வாக்குறுதி படி ஈராக்கிலிருந்த அமெரிக்கப் படைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் அனைத்தும் முற்றிலும் வாபஸ் பெறப்பட்டு விடும் என, ஒபாமா அரசு உறுதி அளித்துள்ளது.

இந்த வாக்குறுதியின் ஒரு கட்டமாக நேற்று முதல், ஈராக்கில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுவதை அமெரிக்க படைகள் நிறுத்தி கொண்டன.

தற்போது ஈராக்கில் தங்கியுள்ள அமெரிக்கப் படைகள், ஈராக் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் மட்டுமே ஈடுபடுவார்கள்.இதனிடையே ஈராக்கில் பணி முடித்து டெக்சாஸ் மாநில முகாமுக்கு திரும்பிய ராணு வீரர்களிடையே ஒபாமா நேற்று உரையாற்றினார்.

Post Comment

Wednesday, September 01, 2010

என்னைத் தருகிறேன்......


என் கனவில் தோன்றும் உன்
விம்பத்தை பற்ற நினைக்கிறேன்
கானல் நீராய் கரைந்து விடுகிறாய்
என் ஒவ்வொரு காலைப் பொழுதிலும்

மிகவும் மகிழ்வானவன் நீ என்று
சொல்கிறார்கள் என்னை நோக்கி
உனக்குத் தெரியாது பெண்னே......
நீ இல்லாத வாழ்வில் நான் வாங்கும்
வலிகள்.....

சிலர் தூற்றுகின்றனர் நீ கூடுதலாக
சிரிக்கிறாய் என்று
அவர்களுக்குத் தெரியாது-என்
மனக் கண்கள் அதே அளவு அழுகிறது என்று

என் சிரிப்புக்குள் ஒழிந்திருக்கும்
வலி கொண்ட அழுகை இதுவரை
புரியவில்லை என் தாய்க்கு கூட.........

என் வாழ்வில் காலங்கள் பல கருகியும்
கண்ணீரோடு காத்துக் கிடக்கிறேன்-என்
காதலை ஏற்றுக் கொண்டு நீ வருவாய் என.......
என் உடம்பினுல் மறைந்த மனதுடன்
மறைந்து விட்டது நீ வரவேண்டும் என்ற
ஆதங்கமும்.......

வீதியோரம் கால் கடுக்க நான் காத்திருக்க
வசந்தகால தென்றலாய் நீ என்னை கடக்க
ஒழிந்திருந்து உனை உற்று நோக்கிய தருணங்கள்
இன்று என் வாழ்வில் வெறும் நினைவுகளாய் மட்டுமே
பகிர்ந்து கொள்ள நீ இல்லாமல்........

உன்னை கண்ட நொடியிலயே தொலைந்த
என் உயிரை தொலைதூரம் சென்று தேடுகிறேன்
தொலைந்த இடத்தை விட்டு விட்டு........

என் உடம்பு தேடுகிறது என் உயிரை
நீ வந்து விடு அல்லது உயிரை தந்து விடு
இனியும் போலியாக வாழ இல்லை பிணமாக வாழ
என்னால் முடியாது....

மறக்க நினைக்கிறது உன்னை என் மனம்
முடியாமல் நனைகிறது என் கண்களுடன்
இதயமும்...
உன்னை நினைத்து இதயம் துடிக்க
இரத்த ஓட்டத்திலும் உன் நினைவு
கலந்துவிட்டது
என் உயிரோடு மட்டுமல்ல உணர்வோடும்
கலந்நு விட்டாய் நீ
பிரிக்க இல்லை எரிக்க கூட முடியாது
என்னில் இருந்து உன் நினைவை....

இதயத்தில் இரத்தம் சொட்ட
விழியில் நீர் கசிய
வலிகள் அனைத்தையும் வாங்கியாக
வலி தாங்கியாக
காத்துக் கிடக்கிறேன் ஒரு வரண்ட
பூமியில்..........


பசுமை கொண்ட மழையாக
நீ என்னை சேறுவாய் என
ஒரு சேதி சொல்
இப்போதே 'என்னைத் தருகிறேன்'
உன் வரவுக்காக.

Post Comment

நடுவரின் தீர்ப்பு மறுபரிசீலனை: பி.சி.சி.ஐ. மறுப்பு

Virakesari.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் நடுவர் தீர்ப்பு மறுபரிசீலனை (யு.டி.ஆர்.எஸ்) முறைக்கு இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ) மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, பொண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி இந்தியா வருகிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் மொகாலியிலும் (அக்., 1 முதல் 5), இரண்டாவது டெஸ்ட் பெங்களுர்விலும் (அக்., 9 முதல் 13) நடக்கிறது. இதற்கு பின் ஒருநாள் போட்டிகள் கொச்சி (அக்,17), விசாகப்பட்டினம் (அக்., 20), கோவாவில் (அக்., 24) நடக்கிறது.

இத்தொடர் குறித்து பி.சி.சி.ஐ., முக்கிய தலைமை அதிகாரி ரத்னாகர் ஷெட்டி கூறுகையில், எதிர்வரும் அவுஸ்திரேலிய தொடரில் யு.டி.ஆர்.எஸ்., முறை நடைமுறைப் படுத்தும் எண்ணம் இல்லை. இதனை நாங்கள் ஐ.சி.சி.,யிடம் முன்னதாகவே தெரிவித்து விட்டோம். தவிர, உலகக் கிண்ண தொடர் என்பது ஐ.சி.சி., நடத்துவது. இதில் யு.டி.ஆர்.எஸ்., முறையை கொண்டுவருவது என்பது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது, என்றார்.

இதுகுறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹாரூன் லார்கட் கூறுகையில்,டெஸ்ட் போட்டிகளில் யு.டி.ஆர்.எஸ்., முறையை அறிமுகம் செய்ததால் ஏற்பட்ட பலன் எல்லோருக்கும் தெரியும். தற்போது இதை எதிர்வரும் உலகக் கிண்ண தொடரிலும் அறிமுகம் செய்ய ஆர்வமாக உள்ளோம், என்றார் ,

Post Comment

பேஸ்புக் போட்டியாக டயஸ்போரா.



பேஸ்புக் நாம் அனைவரும் அறிந்ததும் எம்மில் பலர் உபயோகித்து வருவதுமான ஒரு சமூக வலைப் பின்னல் தளம்.

இந்நிலையில் பேஸ்புக்கிற்கு தகுந்த போட்டியளிக்கும் வகையில் புதிய சமூக வலைப்பின்னல் தளமொன்று செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

இத்தளமானது ' டயஸ்போரா ' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்படி தளத்தினை உருவாக்குவதற்காக நியூயோர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் 200,000 அமெரிக்க டொலர் பணத்தினைத் திரட்டினர்.

பேஸ்புக்கின் உருவாக்குனர் மார்க் ஸுக்கர்பேர்க்கும் இதற்காக நிதியுதவி வழங்கியிருந்தார் என்பது மேலதிகத் தகவலாகும்.

இத்தளத்தின் தொழில்நுட்ப அம்சங்களை நோக்குமிடத்து பேஸ்புக்கின் அடிப்படை அம்சங்களான மல்டிமீடியா செயாரிங், ஸ்டேடஸ் அப்டேட், செட்டிங் வசதி என்பவற்றைக் கொண்டுள்ளது.

இதனுடன் வி.ஒ.ஐ.பி எனப்படும் இணைய மூலமான தொலைபேசி சேவையினையும், இன்ஸ்டன்ட் மெசேஜிங் வசதியினையும் கொண்டமையவுள்ளது.

இதன் சிறப்பம்சம் இது ' ஓப்பன் சோர்ஸ் ' என்பதுதான். இதன் காரணமாக, இத்தளத்தின் பாவனையாளர்கள் தங்களின் அனைத்து விதமான தகவல்கள் மற்றும் செயற்பாடுகளைத் தாங்களே நிர்வகிக்க முடியும்.

Post Comment

வயது 14; உயரம் 6 அடி 9 அங்குலம் : அசத்துகிறார் பிரேஸில் சிறுமி!


Virakesari.
"எனது உயரமே எனக்குச் சாதமான சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளது" என பிரேஸிலைச் சேர்ந்த 14 வயது சிறுமி எலிசனி சில்வா கூறுகிறார்.

14 வயது சிறுமி எலிசனி சில்வாவின் உயரம் என்ன தெரியுமா? 6 அடி 9 அங்குலம்.

அடேயப்பா... ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா?

சாதகமான சூழலை மட்டுமல்ல, சில வேளைகளில் பாதகமாகவும் தனது உயரம் அமைந்து விடுகின்றது என்றும் அவர் கூறுகின்றார்.

அதாவது அவர் பாடசாலை செல்லும் போது பஸ்களில் பயணிக்க முடியாத நிலை உள்ளதாகக் கூறி கவலைப்படுகின்றார் எலிசினி.

'மாடலிங்கி'ல் நாட்டம் கொண்டுள்ள இவர், பிரேஸிலில் இடம்பெறப் போகும் மணப்பெண் அலங்காரப் போட்டி ஒன்றிலும் கலந்து கொள்ளவுள்ளதாக அந்நாட்டு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

14 வயதிலேயே இந்த உயரம் என்றால்...பருவமடைந்து, இளம்பெண்ணாகும் போது இவரது உயரம் எப்படி இருக்கப் போகின்றதோ? திருமணம் என்று வரும் போது இவருக்கேற்ற மணவாளனைத் தேடுவதில் இவரது பெற்றோர் என்ன சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ தெரியவில்லை.

Post Comment

டைட்டானிக் கப்பலின் புதிய படங்கள் வெளியீடு



Virakesari.
கடலில் மூழ்கிப் போய் விட்ட டைட்டானிக் கப்பலின் புதிய படங்கள் கிடைத்துள்ளன. மிகத் துல்லியமான இந்தப் படங்கள் சிலிர்க்க வைப்பதாக உள்ளது.

உலக மக்களால் மறக்க முடியாத பெயர் டைட்டானிக். 1912ம் ஆண்டு 1500பேருக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் அன்டார்க்டிக் கடலில் சென்று கொண்டிருந்த உலகின் புகழ் பெற்ற சொகுசுக் கப்பலான டைட்டானிக், பெரிய ஐஸ் மலையில் மோதி கடலில் மூழ்கியது.

அதுதான் பிரமாண்டமான டைட்டானிக்கின் முதல் சொகுசுப் பயணமாகும். கடலில் மூழ்கியதில் அதில் இருந்த அத்தனை பேருமே ஜல சமாதி அடைந்தனர்.

மூழ்கிப் போய்விட்ட கப்பலை இதுவரை மீட்க முடியவில்லை. அவ்வப்போது டைட்டானிக்கை அடையும் அகழ்வுப் பணிகள் நடந்தபடி உள்ளது. கடல் மட்டத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் ஆழத்தில் டைட்டானிக் புதைந்து கிடக்கிறது.

தற்போது கனடாவைச் சேர்ந்த ஒரு குழு டைட்டானிக் குறித்த புதிய புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட்டு சிலிர்க்க வைத்துள்ளது. இதுவரை இல்லாத மிகத் துல்லியமாக உள்ளன இந்தப் படங்கள். ரோபோட் மூலம் இந்தப் புகைப்

படங்கள் அதி நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 28-ம்தேதி இந்தப் படங்களை பிரீமியர் எக்ஸிபிஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் டைட்டானிக் கப்பலின் முகப்புப் பகுதியின் மேல் பகுதி தெளிவாக தெரிகிறது. முகப்புப் பகுதியின் மேல் பகுதியில் உள்ள தடுப்புக் கம்பி உள்ளிட்டவை அப்படியே இருக்கிறது. கப்பலில் பொருத்தப்பட்டிருந்த நங்கூரம்கூட அப்படியே காணப்படுகிறது.

இமேஜிங் டெக்னாலஜி மற்றும் சோனார் சாதனங்கள் மூலம் இந்தப் புகைப்படங்களையும், வீடியோவையும் எடுத்துள்ளது கனடிய குழு. டைட்டானிக் கண்டுபிடிப்பு முயற்சியில் முதல் முறையாக இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எம்.எஸ். டைட்டானிக் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வை கனடிய நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஆர்.எம்.எஸ். டைட்டானிக் நிறுவனத்திடம்தான் புதைந்து போயுள்ள டைட்டானிக் கப்பலின் உரிமை உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதைந்து போயுள்ள டைட்டானிக் கப்பலிலிருந்து எதையாவது கண்டுபிடித்தால் அதை இந்த நிறுவனத்திடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது கடல் பகுதியில் டேனியல் என்ற புயல் வீசிக் கொண்டிருப்பதால், வானிலை மோசமடைந்துள்ளது. இதனால் ஆய்வுக் குழு கனடாவில் உள்ள நியூபவுன்லேன்ட்டுக்குத் திரும்புவதாக அறிவித்துள்ளது. கடல் அமைதி அடைந்ததும் மீண்டும் அகழ்வாராய்ச்சி தொடரும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

டைட்டானிக் படத்தை எடுத்த இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும்கூட படத்தை எடுப்பதற்கு முன்பு நேரடியாக அகழ்வாராய்ச்சியில் இறங்கி டைட்டானிக்கின் மேல் பக்கம் உள்ளிட்டவற்றை புகைப்படம் எடுத்து வந்தார் என்பது நினைவிருக்கலாம்.

கடைசியாக கடந்த 2004-ம் ஆண்டுதான் டைட்டானிக் குறித்த அகழ்வாராய்ச்சி நடந்தது.



Post Comment