Tuesday, January 18, 2011

உன்னிலும் மாற்றமில்லையோ??????



"யார் பிரிந்த துயரமிது?
இப்படியழுகிறது இந்த வானம்"
வினவினேன், மேகத்தில் இருந்து
விடைபெற்று வந்த மழைத்துளியடம்.

"பூமாதேவியின் அசுத்தம் துடைக்க
அனுப்பியிருக்கிறது எங்களை மேகம்"
என்று சொல்லி கண்சிமிட்டிப் புதைந்தது,
பூமிக்குள் அச் சிறு மழைத்துளி.

அடுத்து வந்த துளியிடம் வினவினேன்
"அசுத்தமா? என்ன அது?"
வந்த ஒவ்வொரு துளிகளும், ஒவ்வொன்றாய்
சொல்லிச் சொல்லி பூமிக்குள் ஒழிந்து கொண்டன.

"போரால் படிந்த இரத்தம் கழுவ,
வேற்றுமையை மறக்கடிக்க,
உதவாக்கரங்களையும் உசுப்பிவிட,
ஊமையான மனிதத்தை பேசவைக்க,

மறந்த இறைவனை நினைவில்வைக்க,
மனிதனை புனிதனாக மாற்றியமைக்க,
பசியின் கொடூரத்தைப் பகிர்ந்தளிக்க,
வாழ்வியலின் யதார்தத்தை புரிய வைக்க".

துளிகள் சொன்ன செய்தியை கேட்டுக் கொண்டே,
அவைகளோடு நானும் காய்ந்தேன்.
என்னில் இருக்கும் அசுத்தம் கழுவ,
நனைந்தவர்களின் கண்கள் ஈரமும் காய.

துளிகள் ஓய்ந்தது.
தொலைத்த இன்பங்கள் எங்கிருந்தோ ஒட்டிக் கொண்டது.
கண்களில் ஈரமும் வற்றியது.
தேகத்துடன் மனமும் இணைந்து வெயிலில் நனைந்தது.

இருந்தும்,
துளிகள் சொன்ன எதுவும் நடக்கவில்லை.
பூமியிலும் நடக்கவில்லை,
என்னிலும் நடக்கவில்லை.

துளியாய் நான் மாறி மேகத்திடம் கேட்க வேண்டும்!
"இந்த மாறாத மனிதனுக்காக,
வீணாக உன் (இரத்த) துளிகளை இழக்கிறாயே.....
தியாகத்தின் முழு வடிவம் நீதானோ?

நீயும் அவனைப் போன்றுதானா?
உன்னிலும் மாற்றம் இல்லையோ?"......


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment